Don't Miss!
- News சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்.. விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைப்படக் கதைசொல்லியின் அடையாளம் - பொண்ணு ஊருக்குப் புதுசு
- கவிஞர் மகுடேசுவரன்
வெற்றி பெற்ற திரைப்படங்கள் பலவற்றில் கதை - ஆர். செல்வராஜ் என்னும் எழுத்தோட்டத்தைப் பார்த்திருப்போம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாய்த் திரைக்கதை வல்லுநராகவும் கதாசிரியராகவும் பணியாற்றியுள்ள ஆர். செல்வராஜ் திரைத்துறைக்கு வெளியே மிகுதியாய் அறியப்படாதவர். அன்னக்கிளி, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், அலைபாயுதே போன்றவை அவருடைய கதைவண்ணங்களே. வைகைக்கரையில் பிறந்து வளர்ந்தவரான அவருடைய திரைத்துறை வாழ்க்கை அன்னக்கிளியில் தொடங்குகிறது. மருத்துவச்சி என்ற பெயரில் அவர் எழுதி வைத்திருந்த கதைதான் அன்னக்கிளியானது. தமிழ்நாட்டு மக்களின் நாட்டுப்புற வாழ்வியலை நன்கு அறிந்தவரான செல்வராஜின் கதைகளில் பொதுத்தளத்திற்குத் தெரியாத சிறப்புக்கூறுகள் மிகுதி. தமிழ்த் திரையுலகப் போக்கினை இண்டு இடுக்குகளில் வாழும் கிராமப் பகுதி மக்களைப் பற்றிய கதையாடல்களுக்குத் திருப்பியதில் செல்வராஜுக்கும் பங்குண்டு. இவற்றிடையே அவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அவற்றில் 'பொண்ணு ஊருக்குப் புதுசு' என்னும் திரைப்படத்தைக் குறிப்பிடாமல் நழுவ முடியாது. ஐம்பதாண்டுகளுக்கு முந்திய நம் ஊர்களும் சமூக உறவுகளும் எப்படி இருந்தன என்பதை இப்படம் பல்வேறு கதைமக்கள் வழியே காண்பிக்கிறது. யாரும் தொடுவதற்கு அஞ்சுகின்ற கதைக்கூறு ஒன்றும் இப்படத்தில் உண்டு.
பண்ணைப்புரம் என்கின்ற அவ்வூரின் மக்கள் தொகை தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது. கடந்த முந்நூறு ஆண்டுகளாக அதே எண்ணிக்கைதான். குழந்தை பிறந்தால் யாரேனும் ஒருவர் இறந்துவிடுவார். அதனால் கருவுற்ற பெண்களை ஊரைவிட்டு அனுப்பிவிடுவார்கள். புதிதாக யாரையும் சேர்க்க மாட்டார்கள். அப்படிச் சேர்ப்பதானால் ஊரிருலிப்பவர்களில் ஒருவர் ஊரைவிட்டு வெளியேற இசைவு தெரிவிக்க வேண்டும். ஒவ்வோர் இரவும் அவர் ஊர்க்கு வெளியே உள்ள கோட்டை வாயிலில் படுத்துக்கொள்ளலாம். இரவானால் அந்தக் கோட்டை வாயில் மூடப்படும். விடிந்ததும் திறக்கப்படும். இந்நிலையில் குடும்பக்கட்டுப்பாடு அலுவலராக அவ்வூர்க்கு உருக்குமணி என்னும் பெண்ணை அரசாங்கம் அனுப்புகிறது. இப்போது ஊர்க்குள் ஒரு புள்ளி கூடுகிறது. அரசின் சொல்லைத் தட்டமுடியாது என்பதால் ஊர்கூடி ஒரு முடிவெடுக்கிறது. அவ்வூரில் செக்கில் மாடுபூட்டி எண்ணெய் வடித்துப் பிழைப்பவனான பிச்சைமுத்தை ஊர்க்கு வெளியே படுக்கும்படி பணிக்கிறது. பிச்சைமுத்து என்றால் ஊரார்க்கு இளப்பம். கள்ளங்கபடமற்றவன். வருகின்ற அலுவலவரை மிரட்டி அனுப்பிவிட்டு பிச்சைமுத்து ஊர்க்குள் சேர்த்துக்கொள்ளப்படுவான் என்று உறுதியளிக்கப்படுகிறது.
பஞ்சவர்ணம் அவ்வூரின் அழகி. அவளுடைய காதலன் கையால் சுழற்றும் தையல் எந்திரத்தை எடுத்துக்கொண்டு ஊரூராய்ச் சென்று தைத்துப் பிழைப்பவன். ஊர்ப் பண்ணையான மயில்வாகனம் பஞ்சவர்ணத்தை அடைவதற்காக அவனிடம் தங்க வளையல்களைக் கொடுத்து நகரத்தில் அடகு வைத்துவரச் சொல்கிறான். இடையே காவலரிடம் நகை திருடுபோயிற்று என்று தெரிவித்து அவனைச் சிறைக்கு அனுப்பிவிடுகிறான். அவன் சிறையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டுமென்றால் தன் ஆசைநாயகி ஆகவேண்டும் என்று பஞ்சவர்ணத்தை மிரட்டுகிறான். வேறு வழியின்றி மயில்வாகனத்தை ஏற்கும் பஞ்சவர்ணம், "உடனிருந்து உன் குடும்பத்தை அழிப்பேன்...," என்று வஞ்சினம் கொள்கிறாள்.
வெள்ளைச்சாமி என்பவன் சீட்டாடி. ஊர் ஆண்களை வீட்டுக்குக் கூட்டிவந்து சீட்டாட வைத்துத் தோற்கடிப்பவன். அதற்காக அவன் மனைவி பிடாரியையே பயன்படுத்துபவன். சீட்டாட்டம் மும்முரமாக இருக்கையில் "பிடாரி... மாட்டுக்குத் தண்ணி வை,.," என்பான். அப்போது சீட்டாடுவோர் பார்வையும் கவனமும் பிடாரியின்மீது விழுகையில் வெள்ளைச்சாமி ஏய்த்து வென்றுவிடுவான். உள்ளூர்க்கு வரும் உருக்குமணிக்கு அலுவலகக் கடைநிலை ஊழியன் வழியாக நிலவரம் எடுத்துச் சொல்லப்படுகிறது. அவள் அதற்கு அஞ்சவில்லை. வெள்ளைச்சாமியும் மிரட்டுகிறான். அதற்கும் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் அவளுக்கு ஊர்க்கடைகளில் பொருள்கள் தரப்படுவதில்லை. அவளுக்காக இரங்கும் பிச்சைமுத்து வெளியூரிலிருந்து வேண்டியவற்றை வாங்கி வந்து தருகிறான். தன்னால் கோட்டை வாயிலுக்கு வெளியே படுத்துறங்குகின்ற பிச்சைமுத்து தன்மீது இரங்குவதனால் உருக்குமணிக்கு அவன்மீதே காதல் வருகிறது. பிச்சைமுத்தைத் திருமணம் செய்துகொள்கிறாள். உருக்குமணியும் ஊர்க்காரியாகிவிட்டமையால், இப்போது கோட்டை வாயிலுக்கு வெளியே படுக்கும் பிச்சைமுத்து ஊர்க்குள்ளே வரவே முடியாத சூழல் ஏற்படுகிறது. குப்பாயிக் கிழவி இறந்தால் எண்ணிக்கை குறையும் என்பதற்காகக் காத்திருக்கிறான்.
மயில்வாகனத்தின் மகன் கண்ணாயிரத்திற்குத் தன் தந்தை பஞ்சவர்ணத்திடம் அடிமையாகிக் கிடப்பது பிடிக்கவில்லை. இருவரையும் கடிகிறான். ஆனால், சிற்றன்னை முறையுள்ள பஞ்சவர்ணம் கண்ணாயிரத்தின் வழியாகவே அக்குடும்பத்தைக் குலைக்க நினைக்கிறாள். அவனைத் தன் ஆசைக்கு இணங்கும்படி அணுகுகிறாள். படத்தில் இந்தப் பகுதிதான் கடுமையான அழுத்தந்திருத்தமான பகுதி. சிற்றன்னையாக நடித்திருக்கும் அந்தப் பெண் நடிப்பில் வெளுத்து வாங்குகிறாள்.
பிச்சைமுத்தின் கடன்களால் எண்ணெய்ச்செக்கின் மாடுகள் பிணையாய்ப் பிடித்துச் செல்லப்பட்டு கறிக்கு அறுக்கப்படுகின்றன. தன் மிதிவண்டியை விற்றுப் பணம்புரட்டிக்கொண்டுவந்து தருகிறாள் உருக்குமணி. அப்பணத்தோடு கடன் தந்தவன் வீட்டு முன்னே பிச்சை முத்து சென்று நிற்கையில் அவன் மாடு கழுத்தறுபட்டுக் கிடக்கிறது. மாட்டுக்கும் நாட்டுப்புறத்தானுக்கும் இடையே நிலவும் உழைப்புத் தோழமையைக் குறிப்பிடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது.
குப்பாயிக் கிழவி இறந்துவிட இனி வீட்டுக்கு வந்துவிடலாம் என்று பிச்சைமுத்துக்கு மகிழ்ச்சி. ஆனால், பிச்சைமுத்தின் தங்கை மீனா வெளியூர் எண்ணெய்க்கடைக்காரரின் மகனைத் திருமணம் செய்துகொண்டு மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறாள். கணவனுடைய குடும்பத்தார் மீனாவை மருமகளாக ஏற்க மறுத்துவிட, புதுமணச் சோடி மீண்டும் பிச்சைமுத்து வீட்டுக்கே வந்து நிற்கிறது. மீண்டும் புள்ளி கூடுகிறது. பிச்சைமுத்து கோட்டை வாயிலுக்கு வெளியே படுக்கப் போகிறான்.
கண்ணாயிரத்தைப் பஞ்சவர்ணம் காமமுற்று அழைப்பது உருக்குமணிக்குத் தெரியும். "தருமத்தை மீறியா நடப்பாய்?" என்று உருக்குமணி கேட்க, "அடி போடி... பஞ்சபாண்டவர் காலத்தில் அஞ்சு பேருக்கு ஒருத்தின்னு சொன்ன தருமம்தான் இப்ப ஒருத்தனுக்கு ஒருத்தின்னு சொல்லுது...," என்கிறாள். இடையில் உருக்கு கருவுறுகிறாள். குடும்பக் கட்டுப்பாட்டுப் பரப்புரைக்காக வெளியூர் சென்று வருகையில் இரவாகிவிடுவதால் கோட்டை வாயிலேயே படுத்திருந்து விடிகாலை வீட்டுக்கு வருவது உருக்குமணியின் வழக்கம்தான். கண்ணாயிரத்தின் இராத்தங்கிய மறுநாள் வருகையை உருக்குமணியோடு இணைத்துப் பரப்புகிறாள் பஞ்சவர்ணம். இது பிச்சைமுத்தின் காதுக்கும் எட்டுகிறது. சினத்துடன் உருக்குமணியைக் கேட்கிறான். என் வயிற்றிலிருக்கும் கருவையா ஐயப்படுகிறாய் என்று தன் கருவைக் கலைத்துவிடுகிறாள் உருக்குமணி. எப்போது நீ என்னை நம்புவாயோ அப்போதுதான் பெற்றுத் தருவேன் என்கிறாள்.
மீனாவின் கணவன் வீட்டோடு அமர்ந்து தின்கிறான். வெள்ளைச்சாமியோடு சீட்டாடுகிறான். பிடாரியைக் கெடுக்கவும் துணிகிறான். "வீட்டு நிலைமை தெரியுதா... வேலைக்குச் செல்லலாமே," என்று மீனா கேட்க, "என் அப்பனிடம் ஏழு தலைமுறைக்குரிய சொத்திருக்க நான் வேலைக்குச் செல்லவேண்டுமா ?" என்று சினக்கிறான். பஞ்சவர்ணம் கண்ணாயிரத்திடம் சவுக்குத் தோப்புக்கு உன் தந்தை வரச்சொன்னார் என்று பொய் சொல்கிறாள். சவுக்குத் தோப்பில் பஞ்சவர்ணம் சென்று அவனை மறிக்கிறாள். "உன்னை இங்கே வரச்செய்யத்தான் அப்படிப் பொய் சொன்னேன்...," என்று காமத்தோடு பார்க்கிறாள். கண்ணாயிரம் "அம்மா..." என்று அழைக்க, "யாருடா அம்மா ? நானா உன்னைப் பெத்தேன் ?" என்று அறைகிறாள். கண்ணாயிரத்தைத் துரத்திக்கொண்டு பஞ்சவர்ணம் ஓடுகிறாள். பிச்சைமுத்துக்கு சவுக்குத் தோப்பில் கண்ணாயிரத்தோடு இருப்பது உருக்குமணி என்று தவறாகச் சொல்லப்பட அரிவாளோடு செல்கிறான். கீழே விழுந்த கண்ணாயிரத்தைத் தழுவச் செல்லும் பஞ்சவர்ணத்தின் தலையை வெட்டிக்கொண்டு வருகிறான். படம் முடிகிறது.
இது சிறப்பான திரைப்படமாக எடுக்கப்படவில்லைதான். அன்றைய திரைப்பட ஆக்க முறைகளைக் கருத்திகொண்டு பார்த்தால் சராசரிக்கு மேம்பட்டதும் குறிப்பிடத்தக்கதுமான ஒரு முயற்சியைத்தான் செய்திருக்கிறார்கள் என்று கூறலாம். எப்படிப் பார்த்தாலும் இத்திரைப்படத்தின் கதைமதிப்பு எளிதில் புறந்தள்ளிவிடக் கூடியதன்று. வேறு யாரும் தொடத் துணிகின்றதும் அன்று. ஒரு கதாசிரியர் சுடுவு சுடுவாக கதையைப் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்க்கும்போது அவர் கதையைத் தவறவிடுவார். கதை நிகழ்வுகளாகவே இப்படம் அடுக்கி எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை நெருக்கியமைத்த கதைக்கூறுகளைக் கூறும்விதமாய் எடுத்திருக்கிறார் செல்வராஜ். இதன் வெற்றி தோல்வி குறித்து ஏதும் தெரியவில்லை. செல்வராஜ் என்னும் திரைப்படக் கதைசொல்லியின் தனித்த அடையாளம் சொல்லும் முயற்சியாய் விளங்குகிறது இப்படம்.
- கவிஞர் மகுடேசுவரன்
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
ஒரு பக்கம் விவாகரத்து பஞ்சாயத்து.. மறுபக்கம் ஐஸ்வர்யா செஞ்சத பாருங்க.. ட்ரெண்டாகும் வீடியோ