Meiyazhagan: டீசலுக்கு கூட காசு இல்லாமல் தவித்தேன்.. 96 இயக்குநர் பிரேம் குமார் ஓபன்!
சென்னை: நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, 96 படத்தினை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெய்யழகன் (Meiyazhagan ). இந்தப் படத்தினை சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் கார்த்தியின் 27வது படம் ஆகும்.
இந்தப் படத்திற்கு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். மேலும் படத்தில் இரண்டு பாடல்களை உலக நாயகன் கமல் ஹாசன் பாடியுள்ளார். இப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

படம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றார். குறிப்பாக, 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியுள்ளார். அதில், எனக்கு பொதுவாகவே ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பெரியதாக ஈர்ப்பு ஏற்பட்டது இல்லை. அதனால் 96 படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாகவும் நான் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்குமேல், 96 படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எழுதலாம் என முடிவு செய்து கதையை எழுதினேன். எழுதி முடித்த பின்னர் எனக்கு அந்த கதை மிகவும் பிடித்துப் போய்விட்டது. ஆனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவேண்டும் என்றால், அதனை நான் மட்டும் முடிவு செய்தால் போதாது எனக் கூறியுள்ளார்.

இவரது இந்தப் பேச்சு, 96 படத்தின் தீவிரமான ரசிகர்களின் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தீவிரமாக பேசி வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், பிரேம் குமார் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் மெய்யழகன். மெய்யழகன் படத்தின் கமிட் ஆவதற்கு முன்னர் டீசல் அடிக்க கூட பணம் இல்லாமல் இருந்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது 96 படத்திற்குப் பிறகு 96 படத்தின் இரண்டாம் பாகம் உட்பட இரண்டு படங்களுக்கு கதை எழுதினேன். அடுத்து படம் செய்ய இடைவெளி ஏற்பட்டதால், 96 படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை எல்லாம் தீர்த்துவிட்டேன். ஆனால் அது எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் லயோலா கல்லூரியில் என்னை சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள். நான் படிக்க ஆசைப்பட்ட கல்லூரியில் பேச அழைத்துள்ளார்கள் என மகிழ்ச்சியோடு சென்றேன். அப்போது எனது பேங்க் மேனேஜர் எனக்கு போன் செய்து ஒரு விஷயத்தைக் கூறினார்.

கார் நின்றுவிடும்: அதாவது, எனது பேங்க் அக்கவுண்டில் பணம் மிகவும் குறைவாக இருப்பதாக கூறினார். நானும் அதனை மனதில் வைத்துக் கொண்டு லயோலா கல்லூரிக்கு போய்விட்டேன். அங்கு மாணவர்கள் மத்தியில் உரை ஆற்றிய பின்னர், அங்கிருந்து வெளியேறவேண்டும். எனது காரில் டீசல் அளவு குறைந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கார் நின்றுவிடும் எனும் நிலையில் உள்ளது. எனக்கு கல்லூரிக்குள் கார் டீசல் இல்லாமல் நின்றுவிடக்கூடாது என மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

பயம்: அந்த நேரம் பார்த்து கேட்டில் இருந்த செக்யூரிட்டி வேறு எங்கோ சென்றுவிட்டார். அவர் வந்து கேட்டினைத் திறக்கும் வரை கார் ரன்னிங்கில் இருக்க வேண்டும். கல்லூரியில் இருந்து வெளியே போனபின்னர், கார் நின்றால் கூட பரவாயில்லை என மனதிற்குள் ஓடிக்கொண்டே உள்ளது. அப்போது கல்லூரி தரப்பில் இருந்து சிறிய மொமண்டோ ஒன்றைக் கொண்டு வந்து ஒருவர் கொடுத்தார். கல்லூரியின் கேட்டை திறக்கும் வரை, அவர்கள் கொடுத்த மொமண்டோவை பார்த்துக் கொண்டு இருந்தேன். அதில் ஒரு கடிதம் இருந்தது. அதில் நான் வந்ததற்காக நன்றி தெரிவித்திருந்தனர். அந்த கடிதத்தை உள்ளே வைக்கும்போதுதான் பார்த்தேன், அவர்கள் மொமண்ட்டோவுடன் பணம் கொடுத்துள்ளனர்.

மெய்யழகன்: அவர்கள் பணம் கொடுப்பார்கள் என எனக்குத் தெரியாது. அந்தப் பணம் நான் வந்து செல்வதற்கான போக்குவரத்துச் செலவிற்கு அவர்கள் கொடுக்கும் பணம் என்பது பின்னர் தெரிந்து கொண்டேன். அன்றைய தினம் அந்தப் பணத்தை வைத்துத்தான், வண்டிக்கு டீசல் அடித்தேன். அதற்கு அடுத்த நாள்தான் கார்த்தி சார் எனக்கு போன் செய்தார். அதன் பின்னர்தான் மெய்யழகன் படத்தில் கமிட் ஆனேன்" என பேசியுள்ளார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











