விஜய் இறந்ததாக நினைத்து வாடும் சிறுவன்.. பிகில் ராயப்பன் இறந்த காட்சியை பார்த்து மனம் பாதிப்பு!
சென்னை: நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில்,மைக்கேல் ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் இறந்து விட்டதாக நினைத்து, விஜய்க்கு நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என அறிவுத்திறன் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் ஊர் ஊராக சுற்றி வருகிறான். இந்த சிறுவனின் செயலால், என்ன செய்வது என்று தெரியாத குடும்பத்தினர், விஜய் ஒருமுறை அந்த சிறுவனை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவுடன் காத்திருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர். இதில், விஜய் அப்பா, மகன் என இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்த மைக்கேல் ராயப்பன் இறந்து விடுவார், இந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த திருச்சியைச் சேர்ந்த 16 வயதே ஆன அறிவுத்திறன் பாதிக்கப்பட்ட சிறுவன் அமான், விஜய்யின் அப்பா இறந்துவிட்டால், அவரைப்பார்த்து ஆறுதல் சொல்லவேண்டும் என வீட்டை விட்டு அடிக்கடி ஓடிவந்துவிடுவதாக சிறுவனின் பாட்டி வேதனையுடன் கூறியுள்ளார்.

விஜய் ஆறுதல் சொல்ல வேண்டும்: பேரன் அமான், ஒரு வயதிலேயே அறிவு திறன் பாதிக்கப்பட்ட சிறுவன், இருந்தபோதும் அந்த குறையே தெரியாமல் ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். ஓரளவிற்கு படித்துக் கொண்டிருந்த போது தான், ஒரு நாள் இரவில் விஜய் நடித்த பிகில் படத்தை தனியாக பார்த்தார். அந்த படத்தில் விஜய் இறப்பது போன்ற காட்சி வந்தது. அந்த காட்சியை பார்த்ததில் இருந்து அமான் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டார். விஜய்யின் அப்பா இறந்துவிட்டார், அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நாங்கள் அது சினிமா அவர் நன்றாகத்தான் இருக்கிறார் என்று எடுத்து சொல்லியும் கேட்காமல், விஜய் பார்க்க அடிக்கடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துவிடுகிறார்.
மனதளவில் பாதிப்பு: வீட்டில், இவரை பாதுகாக்க முடியாததால், விழுப்புரத்தில் ஒரு ஹாஸ்டல் ஒன்றில் அவரை சேர்ந்திருந்தோம். ஆனால், அங்கும் சுவர் ஏறி குதித்து தப்பித்து விஜய்யை தேடி சென்னை வந்துவிட்டார். இப்படியே செய்து கொண்டிருப்பதால் எங்களது குடும்பம் மிகுந்த மனவேதனைக்கும் ஆளாகி உள்ளது. இதனால், மும்பைக்கு அனுப்பி விடலாம் என்று நினைத்தோம், ஆனால் செல்லும் வழியிலேயே ரயிலில் இருந்து இறங்கி சென்னைக்கு வந்துவிட்டார்.
கண்ணீர் பேட்டி: விஜய்யின் வீட்டில் முன்னாடி சுற்றித்திரிந்து கொண்டிருந்த இவரை போலீசார் பிடித்து விசாரித்து எனக்கு, தகவல் கொடுத்தனர். என் பேரனின் நிலைமையை பார்த்த அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் தான், விஜய் இன்று பனையூர் வருவதாக சொல்லி புஸ்ஸி ஆனந்திடம், மகனின் நிலையை எடுத்து சொல்லி ஒரு மனு எழுதி கொடுக்க சொன்னார். இந்த மனுவைப் பார்த்து விஜய், என் பேரனை சந்தித்து விட்டால், அவனின் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. இதனால் மனு கொடுப்பதற்காக, நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அமானின் பாட்டி பாத்திமா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











