பார்த்திபனின் டீன்ஸ்.. வெளியாவதில் சிக்கல்.. தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: இயக்குநர் பார்த்திபன் டீன்ஸ் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை தாமதப்படுத்தியதாக கோவையைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர் மீது நேற்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்த நிலையில், சிவபிரசாத் தரப்பில் படத்தின் ரிலீஸுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வித்தியாச விரும்பியான பார்த்திபன், இதுவரை 15 திரைப்படங்களை இயக்கி 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய இரவின் நிழல் என்ற படம் நான்லீனியர் முறையில் வெளியான முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற பாராட்டை பெற்றது. இரவின் நிழல் படத்தை தொடர்ந்து, தற்போது பார்த்திபன் டீன்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் வெளியாக உள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியன் 2, 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே தேதியில் டீன்ஸ் படத்தை பார்த்திபன் துணிந்து வெளியிட உள்ளார்.

டீன்ஸ் திரைப்படம்: டீன்ஸ் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கோவை தனியார் கிராபிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சிவபிரசாத் என்பவர் மீது நேற்று காவல் நிலையத்தில் பாரத்திபன் புகார் கொடுத்திருந்தார். அதில், VFX பணிகளை கடந்த பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் முடித்துக் கொடுப்பதாக கூறியிருந்தார். இதற்காக, சிவபிரசாத் 68 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்டார். அதில், 42 லட்சம் செலுத்தி விட்டேன். இதற்காக போடப்பட்ட ஒப்பந்தமும் என்னிடம் உள்ளது.
ஏமாற்றினார்: ஆனால், கிராபிக்ஸ் காட்சிகளை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொகொடுக்காததால், ஏப்ரல் 19ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்திருந்தேன். இருப்பினும், நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவபிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது என கூறி, கடந்த ஜூன் 4ஆம் தேதி 88 லட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பினார். இதனால், சிவபிரசாத் ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டது, குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை. தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
தடை கோரி வழக்கு: அந்த புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசம், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் சிவபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சிவபிரசாத் தரப்பில் இருந்து டீன்ஸ் படத்துக்கு தடை கோரி சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பார்த்திபன் தரப்பினர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டீன்ஸ் திரைப்படம் திட்டமிட்டபடி 12ந் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படத்தை பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீரைலர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











