நெப்போலியன் மகன் குறித்து பரவும் வதந்தி.. காவல் நிலையத்தில் மருத்துவர் புகார்!
சென்னை: நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுபோன்று பரவும் வதந்தி நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினரையும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்லன் நடிகரான நெப்போலியன் தனது மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆனார். மூத்த மகன் திருமண வயது அடைந்ததைத் தொடர்ந்து, தனுஷுக்கு ஜப்பானில் திருமணம் நவம்பர் மாதம் திருமணத்தை நடத்தினார். தமிழ்நாட்டில் திருமணத்தை நடத்தினால் எப்படி நடக்குமோ அது போல, பந்தக்கால் நடுவது,ஹல்தி என அனைத்தும் தடபுடலாக நடந்தது. இந்த திருமணத்திற்காக ராதிகா, சரத்குமார், மீனா, குஷ்பு, கலா மாஸ்டர், சுஹாசினி என பல நடிகர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே ஜப்பான் சென்றுவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்துக்கொண்டு, நன்றாக கவனித்துக்கொண்டார் நடிகர் நெப்போலியன்.

நெப்போலியன் மகன் திருமணம்: இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வெளியானதும், அதில், தனுஷால் தாலிக்கூட கட்ட முடியாததால், அவரின் தாயார் தான் தாலியை செயினில் கோர்த்து கட்டினார். இதைப்பார்த்த பலர், இப்படி ஒரு நிலைமையில் அவருக்கு திருமணம் தேவையா என கேட்டனர். மேலும், அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது, ஏழ்மையான பெண் என்பதால், நெப்போலியன் இப்படி ஒரு திருமணத்தை செய்துவிட்டார். அக்ஷயா, நெப்போலியனின் உறவுக்கார பெண்தான்,ஏழ்மையான குடும்பம் என்பதால் தான் இதுபோன்ற ஒரு தியாகத்தை அந்த பெண் செய்து இருக்கிறாள். திருமணத்தில் உறவினர்களால் ஏதாவது குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்ணின் சொந்தங்கள் யாரும் வரவில்லை என பலவிதமான விமர்சனங்கள் வந்தன. மேலும், தனுஷின் உடல்நிலை குறித்தும் பல விதமான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து இணையத்தில் வந்து கொண்டு இருக்கின்றன.

உரிய நடவடிக்கை: இந்நிலையில், நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நான் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் அவர்கள் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். எங்களது நிறுவனத் தலைவர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் குறித்தும், அவரின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவருடைய உடல்நிலை குறித்தும் பல தவறான செய்திகள் தொடர்ந்து இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
இது நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது. இதுபோன்று உண்மைக்கு புறம்பாக, தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் தாங்கள் தயவு கூர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும், தனுஷ் மற்றும் அவருடைய மனைவி அக்ஷயா ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











