Jai Bhim - ஜெய் பீமிலிருந்து நீக்கப்பட்ட காட்சி.. செம மாஸா இருக்கே.. வாயடைத்துப் போன ரசிகர்கள்
சென்னை: Jai Bhim Deleted Scene (ஜெய் பீமிலிருந்து நீக்கப்பட்ட காட்சி) ஜெய் பீமிலிருந்து நீக்கப்பட்ட காட்சியை பார்த்த ரசிகர்கள் இதை ஏன் நீக்கினார்கள் என்ற கேள்வியை எழுப்பிவருகின்றனர்.
பத்திரிகையாளரான த.செ.ஞானவேல் தனது முதல் படமாக சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் உள்ளிட்டோரை வைத்து ஜெய் பீம் படத்தை இயக்கினார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் இருளர் இன மக்களின் வலியை முதன்முறையாக இந்திய சினிமாவில் பேசிய படம். சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசின் கவனத்தை இருளர் இன மக்களின் மீது திருப்பியது அந்தப் படம்.

மெகா ஹிட்: ஓடிடி தளங்களுக்கு நேரடியாக படத்தை கொடுக்கும் பழக்கத்தை சூரரைப் போற்று படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்த சூர்யா இந்தப் படத்தையும் அமேசான் ஓடிடி தளத்துக்கு கொடுத்தார். அவர் எதிர்பார்த்தபடியே படம் மெகா ஹிட்டானது. படத்தை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் திரையரங்குகளில் வந்திருந்தால் கண்டிப்பாக இன்னும் பல சாதனைகளை படைத்திருக்கும் என கூறினர்.
குவிந்த பாராட்டு: ஒருபக்கம் படத்துக்கு பாராட்டு கிடைக்க மறுபக்கம் சூர்யாவுக்கும் பாராட்டு குவிந்தது. ஏனெனில் இதுபோன்ற படத்தில் சூர்யா நடித்ததன் மூலம் மக்களிடம் அதிகம் ரீச் ஆனது. எனவே மற்ற முன்னணி ஹீரோக்கள் சூர்யாவை முன் உதாரணமாக கொண்டு சமூக அக்கறை உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் அந்தப் படத்தை தயாரித்ததற்கும் சூர்யாவை பாராட்டினர்.
நோ தேசிய விருது: ஜெய் பீம் படம் கண்டிப்பாக தேசிய விருதுகளை அள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் ஜெய் பீமுக்கு ஒரு விருதுக்கூட கொடுக்கப்படவில்லை. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரகாஷ் ராஜ், பி.சி.ஸ்ரீராம் போன்ற சிறந்த கலைஞர்கள் ஜெய் பீமுக்கு ஏன் விருது கொடுக்கவில்லை என ஓபனாகவே கேள்வி எழுப்பினர். மேலும், ஜெய் பீமின் குரல் அதிகாரவர்க்கத்தை நடுங்க வைத்திருக்கிறது. அதனால்தான் விருது வழங்கவில்லை எனவும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸை காண முடிந்தது.
நீக்கப்பட்ட காட்சி: இந்நிலையில் ஜெய் பீம் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகியிருக்கிறது. படத்தில் சண்டை காட்சி இருக்காது. ஆனால் இந்தக் காட்சி சண்டை காட்சி ஆகும். வெறும் கமர்ஷியலுக்காக எடுக்காமல் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டு வரும் ஒரு ஜோடியை கொலை செய்ய வரும் சாதி வெறி பிடித்த கும்பலை சூர்யா வெளுப்பது போல் அந்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த சண்டைக் காட்சி அற்புதமாக இருக்கிறதே பிறகு ஏன் நீக்கினார்கள். படத்துக்கு அது தேவையில்லை என்று நினைத்தார்களா? இல்லை நீளத்துக்காக நீக்கிவிட்டார்களா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர். ஞானவேலு அடுத்ததாக ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். இதற்கான பூஜை அண்மையில் சென்னையில் போடப்பட்டது. இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் உருவாக்கப்படுவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











