Vijay - தொடர்ந்து துரத்தும் சர்ச்சை.. அடுத்த ஸ்டெப் இதுவா?.. விஜய்க்கு ஆலோசனை கொடுங்க.. ரசிகர்கள் கமெண்ட்ஸ்
சென்னை: Vijay (விஜய்) விஜய்யை தொடர்ந்து சர்ச்சை துரத்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர் அடுத்தக்கட்ட செயலை செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் அமைதி காத்துவந்த அவர் சமீபகாலமாக நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஊக்கத்தொகை: அதன்படி 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களை அழைத்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். அப்போது அந்த விழாவில் விஜய் பேசியது தமிழ்நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வருவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அந்தப் பேச்சில் தெரிந்ததாக பலர் கூறினார்கள்.
இரவு நேர பாட சாலை: அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாட சாலை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அமைக்கப்பட்டது. இதையும் பார்த்த ரசிகர்கள் தளபதி ஃபுல் பார்மில் இருக்கிறார். கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வந்து அடுத்த முதலமைச்சர் ஆவார் என்று தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர். ஒருகட்டத்துக்கு மேல் விஜய்தான் அடுத்த முதலமைச்சர் என்று போஸ்டரும் ஒட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
சர்ச்சை: இப்படி விஜய்யை சுற்றி அரசியல் எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் விஜய்க்கோ தொடர்ந்து சர்ச்சை சுற்றிக்கொண்டிருக்கிறது. நா ரெடிதான் பாடலில் சிகரெட்டோடு தோன்றியது; லியோ படத்தின் ட்ரெய்லரில் கெட்டவார்த்தையை உபயோகப்படுத்தியது உள்ளிட்டவைகளால் அவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். மேலும் இவரா இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்கப்போகிறார் என்று ஓபனாக பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
இலவச சட்ட ஆலோசனை மையம்: இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காகத்தான் சில மாதங்களுக்கு முன்பு பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. நாளை முதல் சென்னையில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்களில் ஒருதரப்பினர் பொதுமக்களுக்கு சட்ட ஆலோசனை கொடுப்பது இருக்கட்டும் தன்னை சுற்றி தொடரும் சர்ச்சைகளுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என விஜய்க்கு முதலில் ஆலோசனை கொடுக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











