கங்கையில் சொட்டு நீர் கூட இருக்காது.. எதிர்கால உலகம் இப்படித்தான் இருக்கும்.. கல்கியின் எச்சரிக்கை!
சென்னை: கல்கி 2898 ஏடி படத்தில் சிஜி காட்சிகளின் பிரம்மாண்டம், கடவுள் அவதாரம், மகாபாரத கதாபாத்திரங்கள், ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர், அன்னா பென், ராஜமெளலி என ஏகப்பட்ட நடிகர்கள் கேமியோக்கள் என தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ் பேக்கேஜ்களை வைத்து இயக்குநர் நாக் அஸ்வின் படத்தை ஹிட் ஆக்கி விட்டார்.
விஷுவல் ட்ரீட்டை தாண்டி கதை ரீதியாக உற்று நோக்கினால் ஒரு மிகப்பெரிய விஷயத்தையும் நாக் அஸ்வின் ரசிகர்களுக்காக வைத்திருக்கிறார். அது ஒரு எச்சரிக்கை மணி. கல்கி 2898 ஏடி படத்தில் மட்டுமில்லை பல ஹாலிவுட் படங்களிலும் இதே கருத்து சமீப காலமாக சொல்லபட்டுக் கொண்டே வருகிறது.

ஆனால், மனிதர்கள் அதையெல்லாம் வெறும் ஃபிக்ஷன் என கடந்து செல்லாமல், நம் உலகில் உள்ள இயற்கை வளத்தை அழித்து விட்டு ஆக்ஸிஜன் மாஸ்க்குகளுடன் சுற்றித் திரியும் அளவுக்கு கொண்டு வந்து விடக் கூடாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை உள்வாங்கிக் கொள்ளுதல் மிக மிக அவசியம்.
கங்கை வறண்டு விடுகிறது: புனித நதி என புராணங்களில் இருந்து போற்றப்பட்டு வந்த இந்தியாவின் மிகப்பெரிய வளமான கங்கை நதியை இப்போதே எந்தளவுக்கு அசுத்தம் செய்ய முடியுமோ செய்து அதை சாக்கடையாக மாற்றி விட்டனர். அந்த கங்கை காலப்போக்கில் வறண்டு போய்விடும் காட்சிகள் கல்கி படத்தின் முதல் காட்சியிலேயே வைக்கப்பட்டு அதிர்ச்சியையும் மனிதர்களின் சுயநலத்தையும் விவரித்து எச்சரிக்கிறார் நாக் அஸ்வின்.

தண்ணீர் பஞ்சம்: சில வருடங்களுக்கு முன்பு வரை இலவசமாக கிடைத்து வந்த குடி தண்ணீர் இன்று பாட்டிலிலும் வாட்டர் கேன்களிலும் அடைக்கப்பட்டு பெரிய பிசினஸாக மாறி விட்டது. இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த தண்ணீருக்கும் பஞ்சம் வந்து விடும் என்பதையும் கல்கி படத்தில் ஆரம்பத்திலேயே காட்சிகள் வாயிலாக கடத்தி இப்படியே போனால் எதிர்கால சந்ததிக்கு குடிக்கக் கூட தண்ணீர் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளார்.
காற்றும் கெட்டுவிடும்: தண்ணீரை தொடர்ந்து சுவாசிக்கும் காற்றும் கெட்டுவிடும் அதன் பின்னர் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் கூட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முதுகில் சுமந்துக் கொண்டு மாஸ்க்குகள் மூலமாகத்தான் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதையும் காட்டியுள்ளார்.

காம்ப்ளக்ஸ் தான் லட்சியம்: கல்கி படத்தில் காம்ப்ளக்ஸிற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்பது தான் பிரபாஸின் ஒரே லட்சியம். ஏனென்றால் அங்கே தான் மனிதன் இப்போது வாழும் வாழ்க்கையை வாழ முடியும். நல்ல காற்று, நல்ல தண்ணீர், வசதியான வாழ்க்கை, இந்த பூமி இப்போது வரை காம்பளக்ஸாகத்தான் இருக்கிறது. இதை கடைசி நகரமான காசியாக மக்கள் மாற்றிவிடாமல் இருப்பது நல்லது. அதன் பின்னர் நினைத்தாலும் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்கள் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற நிலைமை உருவாகலாம். ஒரு முட்டைக்காகவும், ஒரு ஆரஞ்சு பழத்திற்காகவும் ஏங்கும் பிரபாஸாக மக்கள் மாறிவிடக் கூடாது.
சுயநலவாதிகளுக்கான எச்சரிக்கை: பணத்தாசை காரணமாக புதிய புதிய டெக்னாலஜியை கொண்டு வருகிறேன் என தங்கள் சுயநலத்திற்காக இயற்கை வளங்களை அழித்து விட்டால் இந்த உலகம் சீக்கிரமே மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு படத்தில் வருவது போலவும், கல்கி படத்தில் வருவது போலவும் தான் ஆகி விடும். நம்மிடம் இருக்கும் இந்த இயற்கையை கடவுள் அவதாரம் எடுத்து வந்து தான் காக்க வேண்டும் என்று இல்லை நாம் அதை அழித்து விடாமல் பாதுகாத்தாலே போதும்.


Click it and Unblock the Notifications











