K. ராஜன் தற்கொ*லைக்கு காரணம் என்ன? ஒரு வருடமாக ஹோட்டலில்.. மூத்த தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் எமோஷன்
சென்னை: மொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள விஷயம் என்றால் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. ராஜன் தனது 85ஆவது வயதில் சென்னையில் உள்ள அடையாற்றில் குதித்து தற்கொ*லை செய்து கொண்டது தான். இவரது உடலை மீட்ட தியணைப்புத் துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்த மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல். அழகப்பன், மறைந்த கே. ராஜன் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், “ தயாரிப்பாளர் கே ராஜன் மிகவும் தைரியசாலி, யாரைப் பார்த்தும் பயப்பட மாட்டார், தனக்கு தோன்றுவதை எந்த இடத்திலும் பேசக் கூடியவர். கொஞ்சம் கோபக்காரரும் கூட. திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக எல்லாம் இருந்தவர். மேடைகளில் மிகவும் தைரியத்துடன் பல விஷயங்களை தயக்கம் இல்லாமல் பேசக் கூடியவர். அவர் மிகவும் செல்வச் செழிப்புடன் தான் வாழ்ந்து வந்தார். எனக்குத் தெரிந்து அவருக்கு கடனோ, பெரும் நிதி நெருக்கடியோ என எதுவும் இல்லை.
ஒருமுறை அவரைச் சந்தித்தபோது மிகவும் மனமுடைந்து, பேசினார். வீட்டில் கொஞ்சம் பிரச்னை ஆகிவிட்டது, அதனால் ஹோட்டலில் தங்கிக் கொண்டு இருக்கிறேன். மகள் வீட்டில் இருந்து உணவு வருகிறது, நான் இங்கேதான் ஒரு வருடமாக தங்கி வருகிறேன் என்று மிகவும் மன வேதனையுடன் கூறினார். ஆனால் என்ன பிரச்னை என்று எல்லாம் என்னிடத்தில் விவரமாக அவர் கூறவில்லை. மேலும் எனக்குத் தெரிந்தே அவர் பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். அதனால் அவருக்கு பணத்திற்கு எல்லாம் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆனால் அவர் ஏன் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. தகவல் கிடைத்ததும், அவரது குடும்பத்தினரைத்தான் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன், ஆனால் என்னால் தொடர்பு கொள்ளமுடியவில்லை” என்று தெரிவித்தார். மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொ*லைக்குப் பின்னர், அவருடன் பல ஆண்டுகள் பழகிய மூத்த தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் மிகவும் வருத்தத்துடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
தற்கொலை தீர்வல்ல: வாழ்க்கையின் தற்காலிகப் பிரச்சினைகளுக்கு தற்கொலை ஒருபோதும் தீர்வல்ல. அது நம்மை நேசிப்பவர்களுக்கு ஆறாத வடுக்களையே தரும். மனபாரம் அதிகமாகும்போது, தகுந்த நபர்களிடம் பேசிப் பகிர்வதே புத்திசாலித்தனம். துணிவோடு எதிர்கொண்டால் எந்த சவாலையும் வெல்லலாம். நம் உயிர் விலமதிப்பற்றது, வாழ்ந்து காட்டுவோம்!
இலவச மனநல உதவி எண்கள்:
சினேகா (Sneha Helpline): 044-24640050
மத்திய அரசு உதவி எண் (KIRAN): 1800-599-0019
மாநில அரசு உதவி எண்: 104


Click it and Unblock the Notifications