சாதிய பெருமிதங்கள் அண்ட முடியாத உன்னத வாழ்வு: தோழர் நல்லகண்ணு குறித்து மாரி செல்வராஜ் உருக்கம்
சென்னை: தமிழ்நாட்டின் மொத்த அரசியலுமே நேற்று மாலையில் இருந்து உச்சரித்துக் கொண்டு இருக்கும் பெயர் தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், சுதந்திர போராட்ட வீரர், தகைசால் தமிழர், தனது வாழ்நாளிலும் மறைவுக்குப் பின்னரும் பிறருக்கு பயன்படும் வாழ்க்கையை வாழ்ந்த ஒரு ஒப்பற்ற, அழுக்கற்ற அரசியல் தலைவர் மறைவு குறித்து தான். அவரது உடல் அவரது விருப்பப்படியே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்புக்காக ஒப்படைக்கப்படவுள்ளது. அதற்கு முன்னர் அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை செய்யப்படவுள்ளது.
மறைந்த செய்தி வெளியானதுமே கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கத்தைச் சேர்ந்த அனைவருமே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்து கொண்டே இருக்கிறார்கள். பலரும் அவரது அரசியல் பணிகள், மக்கள் இயக்கப்பணிகள், சிறை சென்ற போது எப்படி எல்லாம் சித்திரவதைகளை அனுபவித்தார் என்றும், தனது குடும்பத்தில் இன்னல்களும் நெருக்கடிகளும் சவால்களும் ஏற்பட்ட போது எதற்காகவும் சிபாரிசுக்குச் சென்று நிற்காத ஒரு உன்னதமான தலைவர் என்று அவரது புகழ் குறித்து எடுத்துக் கூறி வருகிறார்கள்.

மாரி செல்வராஜ்: இப்படி இருக்கையில் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தோழர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தோழர் நல்லகண்ணு குறித்து பகிர்ந்து கொண்டார். அதாவது, " ஐயா நல்லகண்ணு அவர்கள் வாழ்ந்த ஊருக்கும் நான் வாழ்ந்த ஊருக்கும் இடையில் ஒரு தண்டவாளம் தான் ஓடிக் கொண்டு உள்ளது. சென்னையில், பரியேறும் பெருமாள் படம் வெளியான கால கட்டத்தில் இருந்து அவர் என்னுடன் பேசிக் கொண்டே தான் இருந்தார். பரியேறும் பெருமாள் படம் வெளியான காலகட்டத்தில் அவர் பேசிய அனைத்து வார்த்தைகளும் எனது மனதில் இன்னும் நினைவில் இருக்கிறது.
சாதிப்பெருமைகள் இல்லாத வாழ்வு: தென் மாவட்டங்களில் பிறந்த ஒருவனாக நான் இதைச் சொல்லுகிறேன், " தன் வாழ்வின் கடைசி நாள் வரைக்கும், எந்த ஒரு சாதிய - மத பெருமிதங்களோ, இன்னும் முக்கியமாக சொல்லப் போனால், சாதிய பெருமிதங்கள் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு வாழ்க்கையை, சாதிய பெருமிதங்கள் எடுத்து தன் வாழ்வின் பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாத ஒரு வாழ்க்கையை, மிகப்பெரிய தத்துவ வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கிறார் தோழர் நல்லகண்ணு" என்று அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி உள்ளார். தோழர் நல்லகண்ணு குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications