இசை புயலுக்கு பெருமை சேர்த்த இசை அசுரன்: ரஹ்மான் குடும்பத்தில் இருந்து இன்னொரு தேசிய விருது கலைஞர்!
சென்னை: தான் அறிமுகமாகிய 'ரோஜா' படத்தின் இசைக்காக தேசிய விருது வென்று சாதனை படைத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரியின் மகனான ஜி.வி. பிரகாஷ், ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' பாடலின் மூலம் குழந்தை பாடகராக இசையுலகில் அறிமுகமானார்.
இசை அசுரனாக விஸ்வரூபமெடுத்துள்ள ஜி.வி. பிரகாஷ் தற்போது தேசிய விருது வென்று ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான். புதுமையான மெட்டுகள், துல்லியமான இசைக் கோர்வை, பாடல்களில் பரவசம், பின்னணி இசையில் பிரமாண்டம் என முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அவரது இசையில் 'ஜென்டில் மேன்' படத்தில் இடம்பெற்ற 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடி அசத்தினார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

தாய்மாமன் உறவு
'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' பாடல் வெளியாகி ஹிட்டான போதே பலருக்கும் ஒரு உண்மை தெரியவந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகன் ஜி.வி. பிரகாஷ் குமார் தான், இந்த மழலை குரலுக்குச் சொந்தமானவர் என்று. இசையின் மீதான ஆர்வத்தில் தொடர்ந்து தனது தாய்மாமா ஏ.ஆர். ரஹ்மான் உடனே பயணிக்கத் தொடங்கினார் ஜி.வி. பிரகாஷ்.

வெயிலோடு விளையாடி
மெல்ல மெல்ல தனது இசை சிறகை விரித்து பறக்கத் தொடங்கிய ஜி.வி. வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் 'வெயிலோடு விளையாடி' 'உருகுதே மருகுதே' என பாடல்களிலும், பின்னணி இசையிலும் வெரைட்டி காட்டி அசத்தினார்.

பொல்லாதவன் டூ அசுரன்
'வெயில்' படத்தை தொடர்ந்து அஜித்தின் 'கிரீடம்' படத்திலும் தனது மெல்லிசையால் ரசிகர்களின் மனதை வருடினார். இதனையடுத்து 'பொல்லாதவன்' படம் மூலம் இயக்குநர் வெற்றிமாறனும் ஜி.வி. பிரகாஷும் முதன்முறையாக இணைந்தனர். இந்தக் கூட்டணியில் வெளியான ஆடுகளம், விசாரணை, அசுரன் என அனைத்துப் படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

எப்பவோ கிடைச்சிருக்கணும்
ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்களில் ஜி.வி. பிரகாஷின் இசை ரசிகர்களை மெய்மறக்க செய்திருந்தது. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பிரமாண்டமான பின்னணி இசைக்கும், மதராசபட்டினம் படத்தின் மென்மையான பின்னணி இசைக்கும், ஜி.விக்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆதங்கம். அதேபோல், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்களுக்கும் ரசிகர்களால் ஜி.விக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்டது.

சூரரைப் போற்று
இத்தனை ஆண்டுகளை ஏமாற்றத்துடன் கடந்த ஜி.வி. பிரகாஷ், தற்போது சூரரைப் போற்று படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருதை தட்டித் தூக்கியுள்ளார். இதனை அவரது ரசிகர்களும், அவருடன் பணியாற்றிய இயக்குநர்களும், நடிகர்களும் அமர்க்களமாக கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video

ஏ.ஆர். ரஹ்மானுக்கு பெருமிதம்
ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தில் இருந்து ஜி.வியும் இப்போது முதல் தேசிய விருதை வென்றுவிட்டார்.. இது உள்ளபடி ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரட்டை மகிழ்ச்சியாக தான் இருக்கும். தனது மருமகன், அதோடு தன்னிடமே இசை பயின்ற ஜி.விக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிடைத்துள்ளது அவருக்கு பெருமையாக இல்லாமல் எப்படிப் போகும்.?


Click it and Unblock the Notifications











