துரந்தர் 2 படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
சென்னை: பாலிவுட் நடிகர் ரன் வீர் சிங் நடிப்பில் அண்மையில் வெளியான துரந்தர் 2 படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷீலா முறையீடு செய்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி கடந்த டிசம்பரில் வெளியான 'துரந்தர்' படத்தின் முதல் பாகம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. இந்த படம் 1,300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து துரந்தர் 2 படம் கடந்த வியாழக்கிழமை மார்ச் 19ந் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஆத்தியா தார் இயக்க, சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, மாதவன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

துரந்தர் 2 வசூல்: துரந்தர் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் உலக அளவில் 125 கோடி ரூபாயைக் கடந்தது. நான்கு நாட்களில் துரந்தர் 2 படம் உலகளவில் ரூ. 761 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. துரந்தர் படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் இப்படம்1500 கோடி ரூபாய் வசூலை கடக்கக்கூடும் என திரைத்துறையினர் கருதுகின்றனர்.
தமிழகத்தில் தடை?: இந்நிலையில், துரந்தர் 2 படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முறையிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி மார்ச் 15ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் துரந்தர் 2 திரைப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பாக சில வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதனால், துரந்தர் 2 திரைப்படம் தமிழகத்தில் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தால் அது அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், துரந்தர் 2 திரைப்படத்தை தேர்தலுக்குப்பின் தமிழகத்தில் திரையிடலாம் என வழக்கறிஞர் ஷீலா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்றோ அல்லது நாளையோ விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











