கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான் கேரளாவுக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளார்
நியூயார்க்: ஏ.ஆர்.ரஹ்மான் கேரள வெள்ள பாதிப்புக்கு மிகப் பெரிய தொகையை வழங்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஒவ்வொரு வெற்றியிலும் சொல்வது எல்லா புகழும் இறைவனுக்கே. அப்படிப்பட்ட இறை பக்தி மிகுந்த ரஹ்மான் கடவுளின் நாடு என அழைக்கப்படும் கேரளாவுக்கு ரூ. 1 கோடி நிதியளித்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில், முஸ்தபா முஸ்தபா பாடல் வரிகளை "கேரளா... கேரளா...டோண்ட் வொர்ரி கேரளா... என்று மாற்றிப் பாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
இப்போது இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தில் ரூ. 1 கோடி கேரளாவுக்கு வழங்கியுள்ளார். அமெரிக்காவில் தன்னுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கலைஞர்களும், நானும் சேர்ந்து இந்த சிறிய உதவியைச் செய்கிறோம். இது துயரத்தில் வாடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது சர்கார் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். செப்டம்பர் 5ம் தேதி அவர் இசையமைத்துள்ள செக்கச் சிவந்த வானம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











