எப்போதும் நான் அதை மட்டும் செய்யவே மாட்டேன்.. உறுதியாக அடித்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இசைப்புயலின் இசை பட்டையை கிளப்பியது. அடுத்ததாக அவரது இசையமைப்பில் சில படங்கள் வரவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க ஒரு விஷயத்தை மட்டும் எப்போதும் செய்யமாட்டேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதற்கு வரவேற்பும் கிடைத்திருக்கிறது.
இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் இதுவரை ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தனது ஒவ்வொரு பாடலிலும் ஏதோவொரு புதுமையை புகுத்தும் வழக்கத்தை தனது முதல் பாடலிலிருந்தே வைத்திருக்கிறார் அவர். அதன் காரணமாக இன்றுவரை இந்திய அளவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவிந்த விருதுகள்: முதலில் தமிழில் ஆரம்பித்த அவரது இசை பயணம் அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்றது. அங்கிருந்து அப்படியே ஹாலிவுட்டிலும் நீண்டது. ஸ்ல்ம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்ததற்காக கிராமி விருதுகள், கோல்டன் க்ளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் அவருக்கு கிடைத்தன. அதேபோல் தான் இசையமைத்த முதல் படத்திலேயே இந்திய அரசின் விருதினையும் வென்றிருக்கிறார். ஏராளமான தேசிய விருதுகளை வென்றிருக்கும் அவர் சைமா, ஃபிலிம்பேர் என அவர் வாங்காத விருதுகளே இல்லை.
பிஸி இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் இப்போதும் பிஸியாக இருந்துவருகிறார். அவரது இசையமைப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை, ராயன், அயலான் என வரிசையாக படங்கள் வந்தன. அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வரவேற்பை பெற்றன. பாடல்களை கேட்ட ரசிகர்களோ ரஹ்மானுக்கு இன்னும் ரத்தத்தில் இசையின் வேகம் குறையவில்லை என்று தங்களது மாஸ் ரெஸ்பான்ஸை பெரிதாக கொடுத்தார்கள்.
விவாகரத்து: இதற்கிடையே எந்த சர்ச்சையிலும், கிசுகிசுவிலும் சிக்காமல் இருக்கும் சினிமா பிரபலங்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். ஆனால் கடந்த வருடம் அவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கிளப்பினார். அதற்கு காரணம் கிடாரிஸ்ட் மோனிகா டேதான் என்று இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்து ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு தந்தை போன்றவர். அவருடன் எப்படி இணைத்து பேசுகிறீர்கள் என்று சரமாரியாக பதிலடி கொடுத்தார். அதேபோல் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவும் தரமான பதிலடியை கொடுத்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு: இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், "நான் எப்போதுமே இந்துஸ்தானி பாரம்பரிய இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். அப்படி எனக்கு கான் சாப் கற்றுக்கொடுத்தார். அவர்தான் ஹரிஹரன், சோனு நிகாம் உள்ளிட்ட திரை இசை கலைஞர்களை உருவாக்கினார். அவரால்தான் நான் லோ ரேஞ்ச் இசையை பயன்படுத்த கற்றுக்கொண்டேன். அவர் கொடுத்த பயிற்சிகள் எனக்கு ரொம்பவே உதவியிருக்கின்றன.
பாடல் வரிகளின் முக்கியத்துவம்: நான் இசையில் பல்வேறு வகையான பரிசோதனை முயற்சிகளை செய்ய ஆசைப்படுகிறேன். ஆனால் தரமற்ற பாடல் வரிகளை கொண்ட பாடல்களை எப்போதுமே நான் ஏற்கமாட்டேன். என்னை பொறுத்தவரை பாடல் வரிகள் நினைவுகள் போன்றது. மக்களின் மனதையும், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையும் தீர்மானிப்பதில் பாடல் வரிகளுக்கும் பங்கு இருப்பதாக நான் நம்புகிறேன். எதிர்மறையான பாடல் வரிகளை நான் எப்போதுமே எதிர்ப்பேன். அப்படிப்பட்ட வரிகளை நான் எனது இசையில் பயன்படுத்தமாட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











