பிரதமர் ராணுவ வீரர் சந்திப்பில் தாய் மண்ணே வணக்கம்..தமிழில் வரிகளை பதிவிட்டு நெகிழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்
பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி திருநாளை கொண்டாடினார்.
அப்போது அவர்முன் ராணுவ வீரர்கள் தாய் மண்ணே வணக்கம் பாடலின் இந்தி மொழி பாடலை உணர்ச்சிகரமாக பாடினர்.
பிரதமர் கைத்தட்டி ரசித்த காட்சி ட்விட்டரில் வெளியாகியுள்ளது, அதை குறிப்பிட்டு தமிழ் பாடல் வரிகளை பதிவிட்டு மகிழ்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

சுதந்திர போராட்ட களத்தில் ஒலித்த வந்தே மாதரம்
இந்திய சுதந்திரப் போராட்டமும் வந்தே மாதரம் என்கிற வார்த்தையையும் பிரித்து பார்க்க முடியாது. தமிழகத்தில் செக்கிழுத்த செம்மல் வாவுசி ஆகட்டும், கொடிகாத்த குமரனாகட்டும் அவர்களுக்கு உணர்ச்சியையூட்டிய வரிகள் வந்தே மாதரம். இதை சிவாஜி கணேசன் தனது படங்களில் உச்சரிக்கும்போது அவர் சுதந்திரபோராட்ட வீரராகவே மாறி உச்சரிப்பதை பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட மந்திர வார்த்தைக்கான பாடலை பக்கிம் சந்திர சட்டர்ஜி என்கிற வங்கமொழி இயக்குநர் இயற்றினார். இதன் அர்த்தம் தாயே உனக்கு எங்கள் வணக்கம் என்பதாகும்.

1997 ஆம் ஆண்டு வெளியான ஆல்பம்
இந்த பாடல் வரிகளை முன்னிலைப்படுத்தி ஏ.ஆர்.ரஹ்மான் 1997 ஆம் ஆண்டு ஒரு பாடல் ஆல்பத்தை வெளியிட்டார். தாய் மண்ணே வணக்கம் என்று அதில் வரும் பாடல் உலக புகழ்பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானே அந்த பாடலை பாடி இருப்பார். பல பாடல்கள் அந்த ஆல்பத்தில் இருந்தாலும் தாய் மண்ணே வணக்கம் என்கிற அந்தப்பாடல் பாடும்போது உணர்வை தொடும் பாடலாக அமைந்திருக்கும். இந்த ஆல்பம் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் வரவேற்கப்பட்டது. இந்த பாடல் வெளியான நேரம் சோனி நிறுவனம் ஆல்பத்தை எடுத்து வெளியிட்டது.

25 ஆண்டுகள் ஆனாலும் காலம் கடந்து நிற்கும் பாடல்
ஏ.ஆர்.ரஹ்மானின் அடையாளம் இந்த பாடல் என சொல்லலாம் இந்த பாடலை பிடிக்காத இந்தியரே இல்லை என்று சொல்லலாம். திரைப்பட விழாக்கள் ஆகட்டும் முக்கிய விழாக்களில் எல்லாம் இந்த பாடல் பாடப்படும். ராணுவ வீரர்கள் மத்தியில் இந்த பாடல் மிகப் பிரபலமான பாடல் ஆகும். ஆல்பம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் இன்றும் ஒலிக்கும் போது புதிதாக கேட்பது போல் உணர்ச்சி பெருக்கை உருவாக்கும்.

உணர்ச்சி பெருக்கில் பிரதமர் பாடிய தாய் மண்ணே வணக்கம்
முக்கியமாக தேசம் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் இப்பாடல் ஒளித்துள்ளது. ஆண்டுதோறும் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் எல்லையில் தீபாவளி பண்டிகையை ஒன்றாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் அவர் எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினார். அப்பொழுது ராணுவ வீரர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர். அதில் பாடிய ஒரு ராணுவ வீரர் தாய் மண்ணே வணக்கம் பாடலின் இந்தி மொழி பாடலை பாடினார். உணர்ச்சிகரமாக, உருக்கமாக பிசிரின்றி அவர் பாடினார், அந்த பாடலுக்கு அனைவரும் உணர்ச்சி பொங்க கைத்தட்டி உடன் பாடினர். பிரதமர் மோடியும் தன்னுடைய பதவியை மறந்து அவருடன் ஒன்றிப் போனார்.

நெகிழ்ந்து பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்
இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் தீபாவளி வாழ்த்தை "இதயம் இதயம் துடிக்கின்றதே..எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன், தாய் மண்ணே வணக்கம் 🌹🌺🤲🏼🙏 🇮🇳 Happy Diwali everyone!" எனப்பதிவிட்டு வாழ்த்தி நெகிழ்வுடன் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்ரீட்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications











