Maamannan - மாமன்னன்.. தயக்கத்தோடு சென்ற மாரி செல்வராஜ்.. ஏ.ஆர்.ரஹ்மான் செய்த காரியம்
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருக்கும் காரியம் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் பிறகு அவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்றார். அங்கும் தனது திறமையை நிரூபித்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஹாலிவுட் கதவுகள் திறந்தன. அப்படி அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான படங்கள்: ஹாலிவுட்டில் அவர் இசையமைத்தாலும் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறார். சமீபத்தில் அவர் இசையமைப்பில் பத்து தல, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வெளியாகின. படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரஹ்மானின் இசை அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதேபோல் மணிரத்னம் - கமல் ஹாசன் இணையவிருக்கும் படத்துக்கும் ரஹ்மான் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாமன்னன் ஏ.ஆர்.ரஹ்மான்: அடுத்ததாக அவர் இசையமைப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் உருவாகியிருக்கிறது. ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே சென்சிட்டிவான சாதியத்தை கையில் எடுத்து அதை மிக பக்குவமாக காட்சிப்படுத்தி விருந்து படைத்தவர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக இயக்கிய கர்ணன் கலவையான விமர்சனத்தை பெற இப்போது மாமன்னனை எடுத்திருக்கிறார்.
வடிவேலுவுக்கு முக்கியம்: உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக இருந்தாலும் மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்குத்தான் முக்கியத்துவமான கதாபாத்திரம் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துவருகிறார். அதுமட்டுமின்றி ரசிகர்கள் இதுவரை பார்த்த வடிவேலுவை மாமன்னன் படத்தில் பார்க்கமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். படமானது ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாமன்னன் இசை வெளியீட்டு விழா: மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாள்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலையும் வடிவேலு பாடினார். முன்னதாக படத்திலும் அவர் ரஹ்மான் இசையில், மலையிலதான் தீ பிடிக்குது ராசா பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல்: இந்நிலையில் மாமன்னன் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்த செயல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்க முடிவு செய்த பிறகு மாரி செல்வராஜ் தயக்கத்தோடு ரஹ்மானிடம் கதை சொன்னதாகவும், கதையைக் கேட்ட ரஹ்மானுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதால் தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்து இசையமைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











