ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து.. உங்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.. மகன் வெளியிட்ட உருக்கமான பதிவு
சென்னை: இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா முதலில் அறிவிப்பை வெளியிட்ட சூழலில்; அதனை ஏ.ஆர்.ரஹ்மானும் தனது எக்ஸ் தள பக்கத்தில் நேற்று உறுதிப்படுத்தியிருந்தார். அது இந்திய திரையுலகிற்கே உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானுவின் மகன் அமீன் உருக்கமான ஒரு போஸ்ட்டை வெளியிட்டிருக்கிறார்.
உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார், கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட விருதுகளை அள்ளி வந்த அவர் இன்றுவரை இந்திய இசையின் அடையாளமாக உலகத்தில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவரது இசைக்கு மட்டுமின்றி ரஹ்மானின் தனிப்பட்ட குணத்துக்காகவும் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது இசையமைப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அடுத்ததாக கமல் ஹாசன் - மணிரத்னம் இணைந்திருக்கும் தக் லைஃப் படம் வெளியாகவிருக்கிறது.

திருமண வாழ்க்கை: அவர் சாய்ரா பானுவை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர்களில் கதிஜாவும், ரஹிமாவும் இசைத்துறையில் தங்களது தடத்தை பதித்துவருகிறார்கள். கிட்டத்தட்ட ரஹ்மானும் சாய்ராவும் 29 வருடங்கள் தங்களது திருமண வாழ்க்கையை மிகவும் காதலோடும், அமைதியோடும் நகர்த்தி வந்தார்கள். சூழல் இப்படி இருக்க நேற்று சாய்ரா வெளியிட்ட ஒரு பதிவு உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்து: அதாவது அவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர், "பல ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா பானு எடுத்திருக்கிறார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சி ரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும் பதற்றங்களும், சிரமங்களும் அவர்களுக்கிடையே தீர்க்க முடியாத ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது.
சரி செய்ய இயலாது: இந்நேரத்தில் எந்தத் தரப்பினரும் இந்த விரிசலை சரி செய்ய முடியாது. வலி மற்றும் வேதனையில்தான் சாய்ரா இந்த முடிவை எடுத்திருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்தை கடக்கும் இந்நேரத்தில் தன்னுடைய பிரைவேசியை மதிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொள்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏ.ரஹ்மான் ட்வீட்: சூழல் இப்படி இருக்க ஏ.ஆர்.ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் எங்களது 30ஆவது திருமண வாழ்க்கையை பூர்த்தி செய்வோம் என்று நம்பியிருந்தோம். ஆனால் எதிர்பாராத ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. உடைந்துபோன இதயங்களின் வலியை கண்டால் கடவுளின் சிம்மாசனமும் நடுக்கம் பெறும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அர்த்தத்தை தேடுகிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை கடந்து செல்வதற்கு எங்களுக்கான ப்ரைவசி கொடுக்கும் நண்பர்களுக்கு நன்றி", என்று குறிப்பிட்டிருந்தார்.
ரஹ்மானின் மகன் பதிவு: இந்த விவகாரம் இந்திய திரையுலகில் உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானுவின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த மாதிரியான நேரத்தில் எங்களின் ப்ரைவேசியை மதிக்குமாறு உங்கள் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய புரிதலுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











