தமிழ் மொழிக்கு பிரம்மாண்ட நினைவு சின்னம்.. ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பால் சிலிர்த்து போன ரசிகர்கள்
சென்னை: உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியை உலக மக்களே போற்றி வருகின்றனர். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் தங்களது அறிவாற்றலால் தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அதேபோன்ற ஒரு பெருமை தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் மீண்டும் கிடைக்க இருக்கிறது. இசையில் புயலை கிளப்பிய அந்த லெஜண்ட் தமிழ் மொழிக்காக புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இந்த செய்தி அறிந்த பிரபலங்கள் அவரை பாராட்டு மழையில் நனைய வைக்கின்றனர்.
ரோஜா படத்தின் மூலம் இசையமப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர்.ரஹ்மான். தற்போது இவர் இந்தியாவை தாண்டி உலகமே போற்றும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்துள்ளார். முதல் முறையாக இந்திய இசையமைப்பாளர்களின் கனவாக இருந்த ஆஸ்கர் வென்ற நாயகனும் இவரே. தமிழ் சினிமாவில் இசையில் புரட்சி செய்துள்ளார். 90களுக்கு பிறகு ரசிகர்களின் ரசனையை வேறு கோணத்தில் மாற்றியமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். படங்களுக்கு இசையமைத்தாலும், தனக்கு பிடித்தமான முறையில் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தமிழ் பற்று: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இருந்த போதே தமிழ் மீதும், தமிழ் மொழி மீதும் அதிக பற்று கொண்டிருந்தார். ஆஸ்கர் விருது விழா மேடையிலேயே எல்லாப் புகழும் இறைவனுக்கே என கூறி உலகையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தி பட புரேமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது, தொகுப்பாளர் இந்தியில் பேசியபோது மேடையில் இருந்து இறங்கி கோபமாக சென்றார். பின்னர், தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். இதை பார்த்த ரசிகர்களும் மிகவும் வியப்படைந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இப்படியொரு தமிழ் பற்றா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது முயற்சியும் இருந்திருக்கிறது. அதேபோன்று செம்மொழியான தமிழ் மொழி ஆல்பம் பாடலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
நினைவு சின்னம்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மமான் தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழ் மொழிக்கு பிரம்மாண்ட நினைவுச் சின்னத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, "தமிழ் உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.

இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தமிழால் மகிழ்வோம்: மேலும், ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் பெருமைச்சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்" என தெரிவித்துள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர். தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் என ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்ட தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











