இதனால்தான் குடும்பமே மதம் மாறியது.. நான் என்ன செய்தேன் தெரியுமா? ஏ.ஆர்.ரஹ்மான் அக்கா சொன்ன சீக்ரெட்
சென்னை: இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான் (A.R.Rahman). கோல்டன் குளோப் விருதுகள், ஆஸ்கர் விருதுகள் என விருதுகள் பெற்று சர்வதேச அளவில் புகழ் அடைந்திருப்பவர் அவர். இந்த சூழலில் அவரது அக்கா ஏ.ஆர்.ரைஹானா அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதை வென்று அசத்தியவர். அதன் பிறகு அவர் கோலிவுட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரது இசையில் வந்த புதிய சத்தங்களும், அவர் போட்ட பல ட்யூன்களும் ரசிகர்களை அவர் வசமாக்கியது. எனவே 90களில் ரஹ்மானின் கொடி உயரவே பறந்தது. பல இயக்குநர்கள் அவரை புக் செய்தனர். தொடர்ந்து பாலிவுட்டுக்கும் சென்றார் அவர்.

ஆஸ்கர் நாயகன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
மாமன்னன் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது. முதன்முறையாக மாரி செல்வராஜுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் கதைக்கு தகுந்தபடி தனது இசையை செம்மையாகவே கொடுத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்குள் எளிதாகவே ஊடுருவியது. இதன் காரணமாக பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக வளர்ந்துவரும் இயக்குநர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றமாட்டார் என்ற பிம்பமும் இதன் மூலம் உடைந்தது. அடுத்ததாக அவரது இசையமைப்பில் லால் சலாம் படம் வெளியாகிறது.
மதம் மாறிய ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது தந்தை சேகர் உடல்நலக்குறைவால் இருந்தபோது தர்ஹாவுக்கு சென்று வேண்டியதில் உயிர் பிழைத்து சில காலம் உயிரோடு வாழ்ந்தார். இதனால் இஸ்லாம் மதத்தின் மீது நம்பிக்கை பெருகி இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக கூறப்பட்டது.. அதனால் ஏ.ஆர்.ரஹ்மான் என்று பெயர் வந்தது. அவர் மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இஸ்லாம் மதத்துக்கு மாறியது.
ஏ.ஆர்.ரைஹானா பேட்டி: இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தாயும், ஏ.ஆர்.ரஹ்மானின் அக்காவுமான ரைஹானா அளித்திருக்கும் பேட்டியில் இஸ்லாம் மதத்துக்கு மாறியது குறித்து பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எனது தந்தை இறந்துபோன பிறகு எங்கள் குடும்பம் பல கஷ்டங்களை சந்தித்தது. அந்த சமயத்தில் சூஃபிஸத்தில் எனது தாய் ஈர்க்கப்பட்டார். பிறகு முழு குடும்பமும் மாறியது.
10 வருடங்கள்: ஆனால் நான் மதம் மாறுவதற்கு பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டேன். ஏனெனில் எல்லா சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து 5 வேளை நமாஸ் செய்யும் பழக்கம் பெற 10 வருடங்களை நான் எடுத்துக்கொண்டேன். எனது பெயரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது ஷனாஸ் என்று வைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் ரைஹானா பெயர் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை வைத்துக்கொண்டேன்.
ரைஹானா சேகர் டூ ஏ.ஆர்.ரைஹானா: நான் எனது அப்பாவுடன் இருக்கவே விரும்பினேன். அதனால் அவரது பெயரை எனது பெயருக்கு பின்னால் சேர்த்து ரைஹானா சேகர் என்று வைத்திருந்தேன். ஆனால் நான் ஏ.ஆர்.ரைஹானாவாக இருக்க வேண்டும் என இசைத்துறை விரும்பியது. அதுகுறித்து ரஹ்மானிடம் கேட்டபோது ஏ.ஆர். என்றால் (Allah Rakka) கடவுளின் பெயர் அல்லது கடவுளின் பெயரை குறிக்கும் சொல் என்று சொன்னார். அதனையடுத்து ஏ.ஆர்.ரைஹானாவாக மாறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











