A.R.Rahman - தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) தற்கொலைக்கு முயன்ற ஒருவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் காப்பாற்றியிருக்கும் சம்பவம் தெரிய வந்திருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தை தெரிந்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் அண்மையில் வெளியாகின. படத்தில் அவரது இசையமைபில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மாமன்னன் ரஹ்மான்: பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு அடையாளம் இருக்கிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்பதுதான் அது. ஆனால் மாமன்னன் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் தனக்குள் அப்படி எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். அதேபோல் டாடா படத்தின் இயக்குநர் துருவ் விக்ரமை வைத்து இயக்கப்போகும் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைக்கு முயன்ற நபர்: இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற தன்னை ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்தான் காப்பாற்றியதாக ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார். மலேசியாவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் அடிப்படையில் ஒரு இசை கலைஞர். அவரது தனது ட்விட்டர் பக்கத்தில், "2015ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நள்ளிரவு நான் தற்கொலைக்கு முயற்சித்தேன். அப்போது திடீரென்று என் நண்பரிடம் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

ஓகே கண்மணி: அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற நானே வருகிறேன் பாடல் இருந்தது. அதனைக் கேட்டப் பிறகு என் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை. வீட்டிற்குச் சென்று எனது ஹெட்ஃபோன்கள் மூலம் கிட்டத்தட்ட 48 மணிநேரம் திரும்பத் திரும்ப கேட்டு என் அறையை பூட்டிக் கொண்டேன். விட்டுக்கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே: எனது இசையை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற பயம் இருக்கும் வரை, எனது இசை வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்கிறேன். அந்த பாடல் நான் இருந்த இடத்தில் நான் இல்லை என்பதை உணர வைத்தது. உண்மையில் என் உயிரைக் காப்பாற்றியது" என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், "எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்" என தெரிவித்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











