வெள்ளி திரையை தன்வயப்படுத்திய சிவகார்த்திகேயன்... சக்சஸ் ஃபார்முலாவின் காரணம் எதுன்னு தெரியுமா?
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
இதனைத் தொடர்ந்து விரைவில் மாவீரன், அயலான் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன திரையில் மிகச் சாதாரண போட்டியாளராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.
மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயன் பத்தே ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுத்து நிற்பதன் காரணங்களை இங்கே பார்க்கலாம்.

எஸ்கேவின் ஒத்தையடிப் பாதை
வாய்ப்புகளும் வழிகளும் இங்கே பெரும்பாலும் எல்லோருக்கும் பொதுவானதாக திறந்தே தான் கிடக்கின்றன. அதில் பல ஏற்றத் தாழ்வுகளையும் வாரிசு வரவுகளையும் ஓரங்கட்டிவிட்டால் அனைவருக்கும் அவர்களின் லட்சியத்துக்கு திசைக் காட்டும் ஒத்தையடிப் பாதை நிச்சயம் உண்டு. அதனை சரியாக இலக்கோடு கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் வெற்றி மட்டும் அல்ல பல சாதனைகளும் மெய்ப்படும். அதற்கான சான்றாக நிற்பவர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

எதிர் நீச்சல் அடி
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் சாதாரண போட்டியாளராக கேமரா முன் நின்றவர், இன்று கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போவார் என்பதெல்லாம் வெற்றியாக மட்டும் சுருக்கிக் கொள்ள முடியாது. அது மகத்தான சாதனை, கை தூக்கிவிட யாருமே இல்லையே என வீடுகளுக்கு முடங்கிக் கிடந்த ஏராளமான இளைஞர்களுக்கான திசை காட்டி. வாய்ப்புத் தேடி போனபோதெல்லாம் கண்டுகொள்ளாமல் கை விரித்தவர்களை, திரும்பிப் பார்க்க வைத்த எதிர் நீச்சல்காரன்.

வருத்தப்படாத வல்லவன்
சின்ன திரையில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சினிமாவுக்கான அஸ்த்திவாரமாகப் போட்டு, அசுர வேகத்தில் உயர உயர பறக்கத் தொடங்கினான். கடற்கரையில் கூடும் மக்கள் கூட்டம் போல தான் இவரும் என நினைத்திருந்தவர்கள் மத்தியில் மெரினா பட நாயகன் என்ற அடையாளத்துடன் தனது முதல் அடியை எடுத்து வைத்தான். அதன்பிறகு நிகழ்ந்ததெல்லாம் மாயங்கள் என்றாலும், அதற்காக சிவகார்த்திகேயன் போட்ட உழைப்பும் உறுதியான தன்னம்பிக்கையும் யுகங்கள் கடந்தும் பேசப்படும். தோல்வியோ எதிர்மறையான விமர்சனங்களோ எதற்கும் வருத்தப்படாத வல்லவனாக வலம் வருகிறார்.

ஊர்க்குருவி பருந்து ஆன தருணம்
வெற்றி, தோல்வி, நெருக்கடி, லாபம், நஷ்டம் என எது சூழ்ந்தாலும் அவையனைத்தையும் பக்குவமாக கையாண்ட விதம் தான் சிவகார்த்திகேயனின் பெரும் பலம். வந்த பாதையை மறக்காமல் அதில் கிடைத்த அனுபவங்களை தனது வார்த்தைகளிலும் சிரிப்பிலும் வெளிப்படுத்தும் தரமான வேலைக்காரனாக பேரூருவம் பெற்று நிற்கிறார். நடிப்பு, நடனம், பாடகன், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னை உருமாற்றிக் கொள்வதிலும், தன்னைப் போல பின்புலம் இல்லாதவர்களுக்கு நடிக்க வாய்ப்புக் கொடுப்பதிலும் பிரின்ஸாக கை கொடுக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாடும் மாவீரன்
சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் பொன்னாகவில்லை, ஆனால், அவர் தொடுவதெல்லாம் பொன்னாகும் என்ற நம்பிக்கையை விதைத்தது தான் முதல் வெற்றி. உண்மையான திறமைக்கு வாய்ப்புகள் மட்டும் இல்லை, அது ரசிகர்களையும் கொண்டாட வைக்கும் என்பதற்கும் சிவா தான் உதாரணமாக நிற்கிறார். வெகுஜன ரசிகர்கள் அடிக்கடிக் கூறும், பக்கத்து வீட்டு பையன் போல என்ற வார்த்தைக்கு முதலில் பிள்ளையார்ச் சுழி போட்டதும் எஸ்கே என்ற மாவீரன் தான். இன்னும் பல வெற்றிக் கனவுகளோடு இன்று 37வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் சிவகார்த்திகேயன். அது நனவாகட்டும் என ஃபிலிமிபீட் ரசிகர்களும் வாழ்த்தி மகிழ்வோம்!.


Click it and Unblock the Notifications











