பறந்துகொண்டிருந்த விமானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னால் பெண் செய்த தில்லான சம்பவம்
தூத்துக்குடி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி சென்றார்.
குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.
இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி சென்றார்.

ராகுல் காந்தியின் நடைபயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை இன்று தொடங்குகிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.

தொடங்கி வைக்கும் முதலமைச்சர்
ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை நடை பயணத்தைத் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து கன்னியாகுமாரி செல்கிறார். அவருடன் திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர் பாலு, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடன் பயணித்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் விமானத்தில் பயணித்த கெசல்யா என்ற பெண், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னால் போய் நின்றார்.

பெண்ணிடம் கனிவாகப் பேசிய முதலமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின் முன் நின்ற பெண், நான் ஒரு வங்கி மேலாளர் என்றும், தனது பெயர் கௌசல்யா எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டார், அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லுங்கள் என்ன வேண்டும் என கேட்க, "நான் 1990 களில் ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த திமுக பிரசார கூட்டத்தில் நடந்த நாடகத்தில் நடித்திருக்கிறேன். அதில் தான் பேசியதை இப்போது உங்கள் முன்னிலையில் அப்படியே நடித்துக் காட்ட விரும்புகிறேன்" எனக் கூறினார். அதற்கு முதலமைச்சரும் சரி என ஒப்புதல் அளித்தார்.

அசத்திய வங்கி மேலாளர் சிலிர்த்த முதலமைச்சர்
இதனையடுத்து அந்தப் பெண் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னால் சிறுவயதில் பேசிய வசனங்களை அப்படியே அடுக்கடுக்காக பேசி அசத்தினார், மேலும், வசனத்தின் இறுதியில் தரணி போற்றும் அளவிற்கு தமிழ்நாட்டை வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் எங்கள் ஸ்டாலின் எனக்கூறி அவரை புகழ்ந்தார், அந்தப் பெண் பேசிய வசனத்தை ஆர்வத்துடன் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இறுதியில் கைகொடுத்து பாராட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











