ரூ.1 கோடியை ஏமாற்றிவிட்டார்.. கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்.. பிரபல நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்!
சென்னை: ஒரு கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக பிரபல நடிகர் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ்.
இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரிதார்.

தாரை தப்பட்டை
கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆர்கே சுரேஷ். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பாசக்கார நண்பன்
மருது படத்தில் மிரட்டல் வில்லனாக அலற விட்டிருப்பார் ஆர்கே சுரேஷ். அதேபோல் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் சமுத்திரக்கனிக்கு பாசக்கார நண்பனாக நடித்திருப்பார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஆர் கே சுரேஷ்.

ஆர்கே சுரேஷ் மீது புகார்
இந்நிலையில் பெண் ஒருவர், ஆர்கே சுரேஷ் ஒரு கோடி ரூபாயை ஏமாற்றி விட்டாதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீணா.

ஆர்கே சுரேஷ் அறிமுகம்
இவர்கள் கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராமமூர்த்திக்கு தொழிலில் திடீரென நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு கமலக்கண்ணன் என்பவரின் மூலம் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷின் அறிமுகம் ராமமூர்த்தி வீணா தம்பதிக்கு கிடைத்துள்ளது.

வங்கிக் கடன்
தங்களின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது குறித்து ராமமூர்த்தி ஆர்கே சுரேஷிடம் கூறியுள்ளார். அப்போது தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலம் கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார் ஆர்கே சுரேஷ்.

ஒரு கோடி கமிஷன்
மேலும் 10 கோடி ரூபாய் லோன் வாங்கி தர ஒரு கோடி ரூபாய் கமிஷனும் கேட்டுள்ளார் ஆர்கே சுரேஷ். ஆர்கே சுரேஷை கூறியதை நம்பி அவரது வங்கிக் கணக்கில் 93 லட்சம் ரூபாயும் கையில் 7 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார் ராமமூர்த்தி.

ஆவணங்களில் கையெழுத்து
மேலும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இருவரையும் அழைத்து சென்ற ஆர்கே சுரேஷ் வங்கி மேலாளர் முன்னிலையில் சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளார். மேலும் பிளாங்க் செக்குகளிலும் கையெழுத்து வாங்கியுள்ளார் ஆர்கே சுரேஷ்.

பணம் வரவில்லை
இதனை தொடர்ந்து வங்கி மேலாளர் சக்திவேல் 10 கோடி ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் என ராமமூர்த்தியையும் அவரது மனைவியையும் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சொன்னப்படி 10 கோடி ரூபாய் வங்கிக் கணக்குக்கு வரவில்லை.

மரணமடைந்த ராமமூர்த்தி
இதையடுத்து ராமமூர்த்தி ஆர்கே சுரேஷிடம் கேட்டுள்ளார். அப்போது மிரட்டும் தொனியில் பேசியதோடு பணத்தை தரமுடியாது என்றும் கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமமூர்த்தி அதையே நினைத்து நினைத்து மன உளைச்சலில் உயிரிழந்துள்ளார்.

பணத்தை தர முடியாது
அதன்பிறகு தனக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாயை கொடுங்கள் என வீணா பலமுறை ஆர்கே சுரேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் ஆர்கே சுரேஷ், பணத்தை தர முடியாது என்றும் உன்னையும் உன் மகளையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

கமிஷனரிடம் புகார்
இதனால் அச்சமடைந்த வீணா, நடிகர் ஆர்கே சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது ஒரு கோடி ரூபாயை மீட்டு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பரபரப்பு
நடிகர் ஆர்கே சுரேஷ் ஒரு கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டதாகவும் அதனாலேயே அவரது கணவர் இறந்து விட்டதாகவும் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











