கின்னஸ் நாயகியின் 84வது பிறந்தநாள்... பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்
சென்னை : மறைந்த நடிகை மனோரமாவின் 84வது பிறந்ததினத்தை திரையுலகினர் இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு தரப்பினரும் அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
1500க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து கின்னசில் இடம்பெற்றவர் மனோரமா.

இணைந்து நடித்தவர்
அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி மற்றும் என்டிஆர் என 5 முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெருமைக்கும் ஆச்சி சொந்தக்காரர். கலைத்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பிற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதால் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய விருது
மேலும் தமிழக அரசின் கலைமாமணி, தேசிய விருது, டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது, கலா சாகர் விருது, அண்ணா விருது, எம்ஜிஆர் விருது, ஜெயலலிதா விருது மற்றும் அதிகமான முறைகள் பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளால் தனது வீட்டை நிரப்பியுள்ளார் மனோரமா.

விபத்தாக நடிப்பு
மன்னார்குடியில் பிறந்த இவர், விபத்தாக நாடகத்துறையில் கால் பதித்தவர். அவரது ஊரில் அந்தமான் காதலி என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டபோது, அந்த கதாநாயகிக்கு சரியாக பாடவரவில்லை என்பதால் இவரை நடிக்க வைத்துள்ளனர். அதில் இவரது பாட்டு மற்றும் குரல் வளமை அனைவரையும் கவரவே தொடர்ந்து நடித்துள்ளார் கோபி சாந்தா என்ற மனோரமா

சிறப்பான நாடக பயணம்
இதையடுத்து நாடக உலகின் ராணி என்று போற்றும் அளவிற்கு இவரது நாடக பயணம் தொடர்ந்தது. தொடர்ந்து சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்கள் வெளிவராத நிலையில் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் கிடைக்க அதில் சிறப்பாக நடித்து பெயர் வாங்கினார்.

நாகேஷூடன் ஜோடி
அதையடுத்து தொடர்ந்து அனைத்துமே இவருக்கு ஏறுமுகம்தான். தில்லானா மோகனாம்பாள், எதிர்நீச்சல், கலாட்டா கல்யாணம் என்று அந்த காலகட்டத்தில் இவர் இடம்பெறாத படமே இல்லை என்ற அளவிற்கு இவரது திரைப்பயணம் இருந்தது. குறிப்பாக நடிகர் நாகேஷூடன் இணைந்து இவர் செய்த கதாபாத்திரங்கள் காலத்தால் அழியாதவை.

ரசிகர்களை கட்டி போட்டவர்
தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். தன்னுடைய 20வது வயதில் நடிக்க ஆரம்பித்த மனோரமா தனது இறுதிகாலம் வரையிலும் தொடர்ந்து நடித்து வந்தவர். சுமார் 50 ஆண்டுகள் திரையுலகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொடிகட்டி பறந்தவர் மனோரமா என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications











