கொரோனா பீதிக்கு இடையிலும் பாலைவனத்தில் நடந்த பரபர ஷூட்டிங்.. முடிவுக்கு வந்தது.. பிரபல ஹீரோ தகவல்!
சென்னை: கொரோனாவுக்கு இடையிலும் தொடர்ந்து நடந்து வந்த, பிரபல ஹீரோ நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது.
தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.
இப்போது, ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.

அமலா பால்
நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. படத்துக்காக, தனது உடல் எடையை கடுமையாகக் குறைத்துள்ளார், பிருத்விராஜ். இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாலைவனம்
இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்றது. அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்ததுகொண்டிருந்தபோதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

படப்பிடிப்பு நிறுத்தம்
பின்னர் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் படக்குழு இந்தியா திரும்ப முடிவு செய்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபற்றி நடிகர் பிருத்விராஜ் உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு நடிகர்கள்
பின்னர், இந்தப் படக்குழு ஷூட்டிங்கை அங்கு மீண்டும் ஆரம்பித்தது. 'பிருத்விராஜ் தொடர்பான காட்சிகளை எடுத்து முடித்துவிட்டோம். அவர் இல்லாத மற்றக் காட்சிகளை படமாக்கி வருகிறோம். இதில் சில வெளிநாட்டு நடிகர்களும் நடிக்க இருந்தனர். ஆனால், லாக்டவுன் காரணமாக அவர்களால் ஜோர்டானுக்கு வரமுடியவில்லை' என்று படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன், தெரிவித்து இருந்தது.
Recommended Video

முடிந்து விட்டது
இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் முடிந்துவிட்டதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மொத்தப் படக்குழுவும் நிற்கும் போட்டோவையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவர் மனைவி சுப்ர்யா, இனி எல்லாரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார். ரசிகர்களும் அதையே கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











