திரைப்படமாகும் மகாபாரதம்.. பாகுபலி எழுத்தாளருடன் அமீர்கான் பேச்சுவார்த்தை.. அடுத்த லெவல் போங்க!
ஹைதராபாத்: இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் தந்தையும் பாகுபலி பட திரைக்கதை ஆசிரியருமான கே.வி. விஜயேந்திர பிரசாத்துடன் அமீர்கான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் இணையற்ற இரு மாபெரும் இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தை பலரும் பலவிதமாக படமாக்கி உள்ளனர்.
ராமாயணம் படமாக்கப்பட்ட அளவுக்கு மகாபாரதம் இன்னும் படமாக்கப் படவில்லை. அந்த இரு கதைகளையும் இன்னும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும், பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டே போகலாம் என்பது வேறு விசயம்.

பாகுபலி திரைக்கதை ஆசிரியர்
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்துக்கு சர்வதேச அளவில் அழைப்பிதழ்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பாஜிராவ் மஸ்தானி, மணிகர்ணிகா படங்களின் திரைக்கதையையும் இவர் தான் எழுதிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு ரொம்ப பிடிக்கும்
எழுதுவது தனக்கு ரொம்ப பிடிக்கும் என இந்த லாக்டவுனிலும் தீவிரமாக கதைகளை எழுதி வருகிறார் 77 வயதாகும் பிரபல திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் திரைக்கதையையும் இவர் தான் எழுதி உள்ளார்.

தளபதி விஜயின் மெர்சல்
அட்லி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த மெர்சல் படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்று வித்தியாசமான கதைக்களம், மருத்துவ ஊழல், மேஜிக் மேன் கதை, வெற்றிமாறன் போர்ஷன் என அட்லி உடன் இணைந்து விஜய்யின் மெர்சல் வெற்றிக்கு இவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

பாகுபலிக்கெல்லாம் பாகுபலி
உலகளவில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆக இருக்கட்டும், லார்ட் ஆஃப் தி ரிங்ஸாக இருக்கட்டும் அனைத்தும் மகாபாரத கதைக்கு பின்னர் தான். பரந்து விரிந்த பாரத தேசத்தை கதைக்களமாக்கி, கடவுளை கதாபாத்திரமாக்கி உருவாக்கப்பட்ட அந்த மகா காவியத்தை எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக உருவாக்க முடியும்.

அமீர்கானின் கனவு
பொன்னியின் செல்வன் படத்தை படமாக்க வேண்டும் என மணிரத்னம் கனவு கண்டது போல, மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என அமீர்கானும் கனவு கண்டு வருகிறார். சீக்கிரமே அந்த மிகப்பெரிய புராஜெக்டை ஆரம்பிக்கவும் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அதுகுறித்த பேச்சுவார்த்தையை அவர் நடத்தி உள்ளது தெரியவந்திருக்கிறது.

ரொம்ப சீக்கிரம்
சமீபத்தில், மகாபாரதம் படத்தை உருவாக்குவது பற்றி தன்னிடம் அமீர்கான் பேசியதாக தெரிவித்துள்ள ராஜமெளலியின் தந்தை. ஆனால், அந்த படம் பற்றி விரிவாக பேசுவது இப்போதைக்கு ரொம்ப சீக்கிரம் என்றும், அது தொடர்பான ஆலோசனைகளையும் ஆக்கப் பூர்வமான வேலைகளையும் அமீர்கான் செய்து வருகிறார் என கே.வி. விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











