டல் அடிக்கும் அமீர்கான், அக்ஷய் குமார் படங்களின் புக்கிங்.. பாய்காட் பாலிவுட் தான் காரணமா?
மும்பை: நாளை (ஆகஸ்ட் 11) வெளியாக உள்ள அமீர்கானின் லால் சிங் சத்தா மற்றும் அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் என இரு படங்களின் ப்ரீ புக்கிங்கும் படு மோசமாக உள்ளது.
பாலிவுட் படங்களை பாலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதே இதற்கு காரணம் என்கின்றனர்.
சமீபத்தில், ரசிகர்கள் லால் சிங் சத்தா படத்தை பார்க்க தியேட்டருக்கு வர வேண்டும் என்றும் தான் இந்தியாவை நேசிப்பவன் என்றும் அமீர்கான் பேசியிருந்தார்.

பாலிவுட்டுக்கு போதாத காலம்
தென்னிந்திய படங்களுக்கு பாலிவுட்டில் கிடைக்கும் வரவேற்பு கூட இந்தி படங்களுக்கு சமீப காலமாக கிடைக்காமல் இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சில நல்ல படங்களை ஆதரித்து வரும் ரசிகர்கள் முன்னணி நடிகர்களான அமீர்கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றவர்களின் படங்களை புறக்கணித்து வருகின்றனர்.

அமீர்கான் படம்
அதுல் குல்கர்னி திரைக்கதையில், இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள லால்சிங் சத்தா திரைப்படம் நாளை வெளியாகிறது. அந்த படத்திற்காக இந்தியா முழுவதும் அனல் பறக்கும் புரமோஷனில் ஈடுபட்டு வருகிறார் அமீர்கான். தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

கோப்ரா ரிலீஸ் மாற்றம்
அமீர்கான் படத்துக்காக சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸையே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. ஆனால், பாலிவுட்டிலேயே அமீர்கான் படத்திற்கு வரவேற்பே இல்லை என்கிற அப்பட்டமான உண்மை ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

தங்கல் நாயகனுக்கே இப்படியா
தங்கல் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு 2000 கோடி வசூல் கதவை திறந்து வைத்த அமீர்கானின் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில், அமீர்கான் மற்றும் கரீனா கபூர் நடித்துள்ள லால் சிங் சத்தா படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என தொடர்ந்து நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்திய கடவுள்களையும் இந்து மதத்தையும் அவர் பிகே படத்தில் புண்படுத்தி விட்டார் என நெட்டிசன்கள் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

அக்ஷய் குமார் எந்த படமும் ஓடல
அமீர்கானின் படங்கள் மட்டுமின்றி அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் திரைப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லை என பிரபல பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் மற்றும் விமர்சகரான தரண் ஆதர்ஷ் தற்போது ட்வீட் போட்டு அதிர வைத்துள்ளார். அக்ஷய் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பச்சன் பாண்டே, அட்ரங்கி ரே, சாம்ராட் பிருத்விராஜ் உள்ளிட்ட அனைத்து படங்களும் படு தோல்வியை சந்தித்த நிலையில், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பே இல்லை.

பாசிட்டிவ் விமர்சனம் வந்தால்
லால் சிங் சத்தா மற்றும் ரக்ஷா பந்தன் இரு படங்களும் நாளை வெளியாகி மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மட்டுமே வெள்ளிக்கிழமை முதல் புக்கிங் அதிகரிக்கும். இல்லையென்றால், அடுத்த டிசாஸ்டர்களாக பாலிவுட்டுக்கு இரண்டு படங்களும் மாறிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

ஓடிடி பிரச்சனை
அமீர்கான் பேசும் போது ஓடிடியில் படம் ஒரு மாதத்தில் வெளியாகி விடுவதால் மக்கள் தியேட்டருக்கு வரவில்லை என்றும், குறைந்தது 6 மாதத்திற்கு பிறகு தான் ஓடிடியில் புதிய படம் வெளியாக வேண்டும் என்றும் பேசியிருந்தார். அதே ஓடிடி இருக்கும் காலத்தில் தான் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 மற்றும் விக்ரம் படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











