ஜெயம் ரவி அறிவித்த டைவர்ஸ்.. ஆர்த்தி இப்போது என்ன மைண்ட் செட்டில் இருக்கிறார்?.. அதை இன்னும் செய்யல
சென்னை: ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. அவர்களது திருமணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்க; கடந்த சில காலமாகவே பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்தன. அந்தப் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படவில்லை. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கோலிவுட்டில் எந்த கிசுகிசுவிலும் சிக்காத நடிகர்கள் அரிது. அப்படிப்பட்ட நடிகர்களின் லிஸ்ட்டில் ஜெயம் ரவிக்கும் இடம் உண்டு. மற்ற ஹீரோக்களுடன் ஈகோ பார்க்காமல் பழகுவது; எதார்த்தமான பேச்சு என படு இயல்பாக வலம் வரக்கூடியவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்த இரண்டு படங்களையுமே அவர் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்.

திருமணம்: இதற்கிடையே தான் கல்லூரியில் படித்தபோது ஆர்த்தியை காதலித்த ஜெயம் ரவி வீட்டு சம்மதத்துடன் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களது காதலின் அடையாளமாக இரண்டு மகன்கள் பிறந்தார்கள். மூத்த மகன் கூட ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு பிறகு ஜெயம் ரவி பெரும்பாலும் தன்னுடைய மாமியார் வீட்டில்தான் இருந்தார் என்று கூறப்பட்டதுண்டு. சைரன் படத்தைக்கூட ஆர்த்தியின் தாயார்தான் தயாரித்திருந்தார்.
ஆரம்பித்த பிரச்னை: இதுவரை ஜெயம் ரவியை வைத்து ஆர்த்தியின் தாய் மூன்று படங்களை தயாரித்திருக்கிறார். மூன்று படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றது. இதன் காரணமாக வீட்டுக்குள் சில சில பிரச்னைகள் வந்ததாக கூறப்பட்டது. இருந்தாலும் எப்படியாவது பேசி தீர்த்துவிடலாம் என்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாகவும்; ஆனால் இடையில் விழுந்த விரிசல் மேற்கொண்டு பெரிதாகிவிட்டதாகவும் திரைத்துறையிலிருந்து பேச்சுக்கள் கேட்டன.
அறிவித்த ஜெயம் ரவி: நிலைமை இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும்; நெஞ்சம் கசந்து எடுத்த கனமான முடிவு இது என்றும் நேற்று அறிக்கை வெளியிட்டு தனது விவகாரத்தை உறுதி செய்தார் ஜெயம் ரவி. இது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அப்படி என்னதான் இருவருக்கும் பிரச்னை என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்னும் செய்யாத ஆர்த்தி: ஜெயம் ரவி தனது தரப்பு விஷயத்தை தெளிவுப்படுத்திவிட்டார். ஆனால் ஆர்த்தியோ இன்னமும் வாய் திறக்காமல் இருக்கிறார். முக்கியமாக தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் பெயரை இன்னமும் ஆர்த்தி ரவி என்றே வைத்திருக்கிறார். அதேபோல் Married to ஜெயம் ரவி என்பதையும் அவர் நீக்கவில்லை. இதனை கவனித்த நெட்டிசன்கள் ஆர்த்தி என்ன மைண்ட் செட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லையே. ஒருவேளை ஆர்த்திக்கு விருப்பம் இல்லையோ என்று கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











