தாங்கும் சக்தி இல்லை.. என் மகளுடன் வாழுங்கள் மாப்பிள்ளை.. ரவி மோகனுக்கு கோரிக்கை வைத்த மாமியார்
சென்னை: நடிகர் ரவி மோகன் தற்போது தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து பாடகியும், தெரபிஸ்ட்டுமான கெனிஷாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அதுகுறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன்புதான் அவர் வெளியிட்டிருந்தார். அவரது இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ஆர்த்தியின் தாயாரான சுஜாதா விஜயகுமார் இந்த விஷயத்தில் முதன்முறையாக மௌனத்தை கலைத்திருக்கிறார்.
ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இன்னும் அந்த டைவர்ஸ் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அதில் அவர் தனது தோழி கெனிஷாவுடன் ஜோடியாக கலந்துகொண்டார். இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற பேச்சு பலமாக எழுந்தது.
ஆர்த்தியின் அறிக்கை: கெனிஷாவுடன் ரவி வந்ததை ஆர்த்தி சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்றே தெரிகிறது. அவர்கள் ஜோடியாக வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் எமோஷனலாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தனது மகன்களுக்காக நான் பேசுகிறேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் அன்னையர் தினத்தன்றும் தன்னுடைய மகன்களுடன் ஊட்டியில் இருந்தபடி ஒரு போஸ்ட்டையும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அவரது அறிக்கை மற்றும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் அனைவரிடத்திலும் ஆர்த்திக்கு ஆதரவு அலையை உருவாக்கியது.

ரவி கொடுத்த ஸ்டேட்மெண்ட்: சூழல் இப்படி இருக்க ரவி மோகன் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் அவர், " கடந்த சில வருடங்களாகவே நான் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தேன் என்பது என்னுடைய சினிமா நண்பர்களுக்கு தெரியும். ஒரு வருடத்துக்கு முன்பு எனது முன்னாள் மனைவியின் தாய் பல கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போடும் கட்டாயத்துக்கு அவர்களால் தள்ளப்பட்டேன். மேலும் பத்து நாட்களுக்கு முன்புகூட ஆர்த்தியின் தாயார் என்னை தொடர்புகொண்டு, நான் அந்தக் கடனுக்கு கொடுத்திருந்த உத்தரவாதத்துக்காக ஒரு படத்தில் நடிக்க சொல்லி வற்புறுத்தினார்.
எப்போதும் பணம், பணம்: எப்போதெல்லாம் அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறதோ அதற்குத்தான் அவர்களுக்கு ரவி மோகன் என்ற பெயர் தேவைப்படுகிறது. கடந்த 16 வருடங்களாக நான் இப்படித்தான் நிம்மதியில்லாமல் வாழ்ந்துவருகிறேன். இப்படியான நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து பீனிக்ஸ் பறவையை போல் மீண்டு எழுவேன் நம்பிக்கை இருந்தது. இப்போதும் இருக்கிறது. கடந்த சில நாட்களாக என் மீது அவதூறு கருத்துக்களை பரப்பிவருகிறார்கள். மக்கள் மத்தியில் பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
பணம் அனுப்பக்கூட அனுமதியில்லை: அவர்கள் என்னை பொன் முட்டையிடும் வாத்தாகவே பார்த்தார்கள். எனது அப்பா, அம்மாவுக்கு பணம் அனுப்பக்கூட அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. எனது முன்னாள் மனைவியை பிரிந்த சில நாட்களில் என்னுடைய மகனுக்கு விபத்து நடந்தது. அதையும் என்னிடமிருந்து மறைத்துவிட்டார்கள். நான் எனது மகனை பார்ப்பதற்கு முயன்றபோது பவுன்சர்களால் தடுக்கப்பட்டேன்" என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.
மாமியாரின் விளக்கம்: இந்நிலையில் இந்த விஷயத்தில் இத்தனை காலமாக அமைதியாக இருந்த ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் இப்போது விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நான் கடந்த 25 வருடங்களாக தயாரிப்பாளராக இருந்துவருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை வருடம் இத்துறையில் நீடித்திருப்பதே ஒரு சவாலான விஷயம் என்று உங்களுக்கு தெரியும். இத்தனை ஆண்டுகளில் பட ரிலீஸுக்கு தவிர்த்து வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்போது என்னைப் பற்றி எழுந்திருக்கும் அவதூறுகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
நான் கொடுமைக்காரியா?: நான் ஒரு கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பண பேய் என்றெல்லாம் பல விமர்சனங்கள் என்னைப் பற்றி எழுந்திருக்கின்றன. அதற்கெல்லாம் அப்போதே விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்துவிட்டேன். இப்போதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி சொல்லப்படும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதால் இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன் என்பதை தெளிவுப்படுத்திக்கொள்கிறேன்.
வீராப்புதான் முதல் படம்: நான் வீராப்பு என்ற படத்தை 2007ஆம் ஆண்டு முதன்முறையாக தயாரித்தேன். அந்தப் படம் வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சீரியல் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்று என்னுடைய மாப்பிள்ளை ரவி மோகன் யோசனை சொன்னார். அதன்படி மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கினேன். ஆனாலும் உறவு ரீதியாக இருக்கும் ஒருவரை தொழில் ரீதியாக அணுகும்போது அது எங்கள் உறவுகளை பாதித்துவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது. இருப்பினும் படம் தயாரியுங்கள் என்று ரவி சொன்னார்.
அடுத்தடுத்த படங்கள்: அதன்படி நான் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தப் படத்தின் தொடக்க நாளின்போது கேமராக்களுக்கு முன்பு கைகூப்பி நிற்பதும், பட ரிலீஸின்போது ஃபைனான்சியர்களின் முன்பு கைகட்டி நிற்பதும் என்று ஆகிவிட்டதே. அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? அடங்க மறு, பூமி, சைரன் ஆகிய மூன்று திரைப்படங்களை ரவியை வைத்து தயாரித்தேன். அந்தப் படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்வரை ஃபைனான்சியர்களிடம் கடனாக வாங்கினேன். அதில் 25 சதவீதம் ரவிக்கு ஊதியமாக வழங்கியிருக்கிறேன்.
ஆதாரம் இருக்கிறது: அவருடன் போடப்பட்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு பணம் செலுத்திய விவரம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. அவரை நான் பல கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை நான் வெறும் கதாநாயகனாக மட்டும் பார்க்கவில்லை. எனது மாப்பிள்ளையாக மட்டும் பார்க்காமல் என்னுடைய மகனாகவே பார்த்தேன். அதனால் அவருக்கு எந்தக் கஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பதி கவனத்தோடு இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு பட ரிலீஸின்போது அதிகாலை ஐந்து மணிவரை வாங்கிய கடனுக்காக ஒரு வெள்ளை கவரை தவிர்த்து ஃபைனான்சியர்கள் நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டேன்.
நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன்: பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை அந்தக் கடனுக்குரிய வட்டியையும் நான் மட்டுமே கட்டுகிறேன். சைரன் பட ரிலீஸின்போதுகூட, அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படத்தில் நடித்து தருகிறேன் என்றுதான் கடிதம் கொடுத்தார். என்னுடைய கடனுக்கு பொறுப்பேற்பதாக அவர் எந்த கையெழுத்தும் போடவில்லை. மேலும் இன்னொரு படத்துக்கு ஒரு இயக்குநரை அவரே தேர்ந்தெடுத்து அட்வான்ஸ் கொடுக்க சொன்னார். அதனையும் நான் செய்தேன்.
ரவி மோகன் தவிர்த்துவிட்டார்: கடந்த ஒரு வருடமாக நான் பலமுறை ரவியை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் தவிர்த்துவிட்டார். இந்த சினிமா விஷயத்தை சாக்காக வைத்து சந்தித்து பேசி குடும்ப பிரச்னையில் சமாதானத்தை எட்டலாம் என்ற எண்ணத்தில்தான் ஒரு தாயாக பத்து நாட்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் செய்தேன். மாறாக அவர் சொன்னது போல் படத்தில் நடிக்க நிர்பந்தப்படுத்துவதற்கு இல்லை. ரவி மோகன் சொன்னதுபோல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும் என்று இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
மகனாகத்தான் பார்க்கிறேன்: இன்றும் நான் மகனாகவே நினைக்கும் திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம், ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை.
இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்குதான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











