போச்சுடா... அந்நியன் ரீமேக்கால் அடுத்த பிரச்சனையா... ஷங்கர் மீது ஆஸ்கார் ரவிச்சந்திரனும் வழக்கு
சென்னை : இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் டைரக்டர் ஷங்கர் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு எந்த படத்தையும் ஷங்கர் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை மற்றும் ஐதராபாத் ஐகோர்ட்களில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இன்னும் இந்த வழக்கு முடிவுக்கு வந்த பாடில்லை. இந்தியன் 2 படம் எப்போது மீண்டும் துவங்கப்படும் என்றும் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஷங்கர் மற்ற படங்களை இயக்க தடையில்லை என உத்தரவு பிறப்பித்தது.
இதனால் தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கும் படம், இந்தியில் அந்நியன் ரீமேக் ஆகியவற்றின் வேலைகளை துவக்கினார் ஷங்கர். லைகா உடனான வழக்கும் விரைவில் முடிக்கப்பட்டு, இந்தியன் 2 படப்பிடிப்பும் விரைவில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸ்கார் ரவிச்சந்திரனும் வழக்கு
இந்நிலையில் புதிய திருப்பமாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்நியன் படத்தின் காப்பிரைட்ஸ் உரிமம் தன்னிடம் இருக்கும் போது தனக்கு தெரியாமலேயே அந்நியன் இந்தி ரீமேக் வேலைகளை துவக்கிய ஷங்கர், தயாரிப்பாளர் ஜெயந்த்லால் காடா, ஹீரோ ரன்வீர் சிங் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஷங்கர் மீது வழக்கு
தனக்கு தெரியாமலேயே அந்நியன் இந்தி ரீமேக் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன், தென்னிந்திய திரைப்பட கழகத்தில் இது தொடர்பாக ஏற்கனவே முறையிட்டுள்ளார். இது தொடர்பாக ரவிச்சந்திரன் அளித்த பேட்டியிலும், ஷங்கர் மற்றும் ஜெயந்த்லால் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டை நாட உள்ளதாக கூறி இருந்தார்.

காப்பி ரைட்ஸ் என்னோடது
அந்நியன் படத்தை எழுதி, இயக்கியது மட்டும் தான் ஷங்கர், அந்த படம் தொடர்பான காப்பி ரைட்ஸ் உரிமம் தன்னிடம் தான் உள்ளது. தனது அனுமதியும், சம்மதமும் இல்லாமல் அந்நியன் ரீமேக்கை இவர் அறிவித்துள்ளார் என கூறி இருந்தார்.

ஏற்க மறுக்கும் ஷங்கர்
ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் இந்த குற்றச்சாட்டை டைரக்டர் ஷங்கர் மறுத்துள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டை எந்த வகையிலும் ஏற்க முடியாது என கூறி உள்ள ஷங்கர், இது பற்றி தென்னிந்திய திரைப்பட கழகத்தில் தான் பேசியதாகவும் தனக்கு ஆதரவு அளிப்பதாக தென்னிந்திய திரைப்பட கழகம் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் மும்பை திரைப்பட கழகத்திலும் தான் பேச உள்ளதால் அது வரை பொறுக்கும்படி தெரிவித்துள்ளார்.

எனக்கு தான் சொந்தம்
படத்திற்கு கதை எழுதியது தான் என்பதால் இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என ரவிச்சந்திரனுக்கு ஷங்கர் ஏற்கனவே பதிலளித்து விட்டார். இந்த படத்திற்கு உரிமை கொண்டாட அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமும் இல்லை என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் த்ரில்லர் படம்
2005 ம் ஆண்டு வெளியான சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் அந்நியன். விக்ரம் லீட் ரோலில் நடித்திருந்தார். மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ரோலில் விக்ரம் நடித்திருப்பார்.

2022 ல் ஷுட்டிங்
இந்த படத்தை தற்போது பான் இந்தியன் படமாக ரீமேக் செய்ய உள்ளதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. பென் ஸ்டூடியோஸ், காட் பிளஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், 2022 மத்தியில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்கவும் திட்டமிடப்பட்டது.

பிரச்சனை டைரக்டராகிட்டாரே
ஏற்கனவே தயாரிப்பாளர் உடனான மோதலால் தான் கமல் நடிக்கும் இந்தியன் 2 பாதியில் நிற்கிறது. தற்போது அந்நியன் இந்தி ரீமேக் துவங்கப்படுவதற்கு முன்பே பிரச்சனை, வழக்கில் நிற்கிறது. ஷங்கரின் அனைத்து படங்களும் பிரச்சனையால் பாதியில் நிற்பதால், பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கிய டைரக்டர் ஷங்கர், தற்போது பிரச்சனை இயக்குனராகி உள்ளார். இதனால் இவரை நம்பி படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











