மின்சாரம் போன அபசகுனம்..இளையராஜாவுக்கு கைகொடுத்த பஞ்சு அருணாச்சலம்..ரஜினியை தூக்கி விட்ட படங்கள்
சென்னை: இயக்குநர், கதாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்ட பஞ்சு அருணாச்சலம் எனும் திரையுலக வித்தகர் மறைந்த நினைவு நாள் இன்று.
கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மகனான பஞ்சு அருணாச்சலம் அவரிடம் உதவியாளராகவும், தென்றல் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ரஜினியின் ஆரம்ப காலங்களில் ரஜினிக்கு அற்புதமான பல படங்களை கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவை அறிமுகப்படுத்தி அவரை உயரத்துக்கு கொண்டு வந்தவர் பஞ்சு அருணாச்சலம்.

எம்ஜிஆர் படத்தில் பாடல் எழுதி வாழ்க்கையை தொடங்கிய பஞ்சு அருணாச்சலம்
தமிழ் திரையுலகில் பல பாடல்களை கண்ணதாசன் எவ்வளவு அற்புதமாக எழுதியிருக்கிறார் என்று நினைத்திருப்போம் ஆனால் அந்த பாடல்களை பஞ்சு அருணாச்சலம் எழுதினார் என்றால் யாராலும் நம்ப முடியாது. "பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்" "என்னை மறந்ததேன் கண்களே" என்கிற அற்புதமான பாடல் எம்ஜிஆர் நடித்த கலங்கரை விளக்கம் படத்தில் வெளியாகி பெரிய அளவில் பிரபலமானது. அதை பலரும் கண்ணதாசன் அல்லது வாலி எழுதிய பாடல் என்றே கருதினர். ஆனால் எழுதியது பஞ்சு அருணாச்சலம்.

அற்புதமான திருமண வாழ்த்து பாடல்களை கண்ணதாசனுக்கு இணையாக படைத்தவர்
அதேபோல் சாரதா படத்தில் "மணமகளே மருமகளே வா, வா உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா" என்கிற பாடல் அந்த காலத்து பாசமலர் படத்தில் வாராயோ தோழி வாராயோ என்கிற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு இணையாக அனைத்து திருமணங்களிலும் அந்தப்பாடலும் பாடப்பட்டது. முந்தைய பாடலை எழ்ழுதிய்வர் பஞ்சு அருணாச்சலம், பிந்தைய பாடலை எழுதியவர் கண்ணதாசன். பஞ்சு அருணாச்சலத்தின் சித்தப்பா. இப்படி பல சுவாரஸ்ய தகவல்கள் பஞ்சு அருணாச்சலம் வாழ்வில் உண்டு.

5 ஆண்டுகள் காத்திருந்த இளையராஜா
கிராமத்திலிருந்து அந்த இளைஞர் பல வகைகளில் கஷ்டப்பட்டு இசையை கற்றுக்கொண்டு, புகழ்பெற்ற இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்துக்கொண்டே வாய்ப்பும் தேடினார். அவருக்கு தனியாக இசையமைக்க 1971 ஆம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அவரும் டியூன்கள் போட்டுகொடுத்து விட்டு மகிழ்ச்சியுடன் காஞ்சி காமாட்சி கோயிலுக்கு பூஜை எல்லாம் செய்துவிட்டு மறுநாள் படபிடிப்பு பூஜைக்காக சென்றார். ஆனால் அவரது ட்யூனில் திருப்தி இல்லை என வேறொரு இசையமைப்பாளரை பணியமர்த்திவிட்டதாக தெரிவித்து படத்திலிருந்து நீக்கியதாக சொன்னதைக்கேட்டு அவர் அதிர்ந்து போனார்.

அன்னக்கிளியில் இளையராஜாவுக்கு வாய்ப்பு
அதன் பின்னர் 5 ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் ஒரு படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல ட்யூன்களை போட்டு தயாரிப்பாளருக்கு பிடித்துவிட முதல் நாள் பாடல் ரிக்கார்டிங் தொடங்கும் முன் திடீரென கரண்ட் போக உடைந்துபோனார் அந்த இளைஞர். அதன் பின்னர் கரண்ட் வந்தது. யாரும் அதுபற்றி அசம்பாவிதமாக நினைக்கவில்லை கரண்ட் வந்தவுடன் இசையமைத்தார். படம் வெளியானது. முதல் ஒருவாரம் சரியாக போகவில்லை, அடுத்தவாரம் பாடல்களுக்காக சட்டென்று பிக்கப் ஆனது. அந்தப்படம் அன்னக்கிளி. அந்த இளைஞர் இளையராஜா. வாய்ப்பு தந்த பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்.

ராசய்யாவை இளையராஜாவாக மாற்றிய பஞ்சு அருணாச்சலம்
சிவாஜி ராவை ரஜினிகாந்தாக ஒரு ஹோலி பண்டிகை தினத்தன்று பாலச்சந்தர் பெயர் மாற்றம் செய்தார். அதன் பின்னர் ரஜினிகாந்த் எனும் பெயர் தமிழகத்தின் ரசிகர்களை காந்தம் போல் ஈர்க்கும் பெயரானது. இதேபோல் ராசய்யா எனும் பண்ணைபுர இளைஞரை அன்னகிளியில் அறிமுகப்படுத்தும்போது அவரை இளையராஜா என பெயர் மாற்றம் செய்தார் பஞ்சு அருணாச்சலம். அந்த ராஜாவின் இசை ராஜ கீதமாக தமிழகம் எங்கும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு மேல் இசை ராஜ்ஜியம் நடத்தியது, இன்றும் நடத்திக்கொண்டிருக்கிறது.

நீங்களே எதிர்பாராத தித்திக்கும் பஞ்சு அருணாச்சலம் பாடல்கள்
பஞ்சு அருணாச்சலம் எழுதிய பல பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்களை படைத்துள்ளார். அன்னக்கிளியில் அனைத்து பாடல்களும், கவிக்குயிலில் சின்னக்கண்ணன் அழைக்கிறான் என்கிற பாடல் உள்ளிட்ட இரண்டு பாடல்கள், "கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ" என்கிற ஆறிலிருந்து அறுபதுவரை தொடங்கி ரஜினிக்காக பல பாடல்களை எழுதியுள்ளார் பஞ்சு அருணாச்சலம். இளையராஜா பஞ்சு அருணாச்சலம் காம்பினேஷன் பல அற்புதமான பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அளித்துள்ளனர்.

காலத்தால் அழியாத பாடல்களை படைத்த பஞ்சு அருணாச்சலம்
காலத்தால் அழியாத பல பாடல்களைப்படைத்த பஞ்சு அருணாச்சலம், கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக, விநியோகஸ்தராக பல பரிணாமங்களை தமிழ் திரையுலகில் எடுத்தவர். பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை கொடுத்தவர், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் நாள் மறைந்தார். அவர் தமிழ் திரையுலகில் ஒரு ஆளுமையாக செயலாற்றி மறைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications