ரூ.375 கோடி மோசடி.. 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல நடிகை மும்பையில் கைது!
மும்பையில் தலைமறைவாக பதுங்கி இருந்த நடிகை திஷா சௌத்ரியை, ரியல் எஸ்டேட் வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
மும்பை: ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை திஷா சௌத்ரி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான அனுராதா எனும் இந்தி படத்தில் நடித்தவர் திஷா சவுத்ரி. இவர் சச்சின் நாயக் எனும் பிரபல ரவுடியின் முன்னாள் மனைவியாவார்.

சச்சின் நாயக் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் பெங்களூரு அருகே வீடு கட்டித்தருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.375 கோடி வசூலித்தார். ஆனால் சொன்னபடி யாருக்கும் வீடு கட்டி தரவில்லை.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சச்சின் நாயக்கை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மோசடி செய்து சம்பாதித்தப் பணத்தில் இருந்து ரூ.25 கோடியை திஷாவிடம் கொடுத்ததாகக் கூறினார். அந்த பணத்தில் ரூ.10 கோடியை படம் எடுக்க செலவழித்ததாகவும், ரூ.8 கோடியை குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவுக்காக செலவழித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து திஷாவையும் போலீசார் கைது செய்திருந்தனர். இரண்டு வாரம் கழித்து ஜாமினில் வெளியே வந்த திஷா, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நடிகை திஷா மும்பையில் ஒரு சிறிய வீட்டில் தங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மும்பை சென்று, திஷாவை கைது செய்தனர். மும்பையில் தஞ்சமடைவதற்கு முன்பு, திஷா பல ஊர்களுக்கு சென்று தங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பரமாக வாழ்ந்து பழகிய நடிகை திஷா சௌத்ரி, மும்பையில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்ததை கண்டு போலீசார் வியப்படைந்தனர்.


Click it and Unblock the Notifications











