ஸ்ரீநிவாச சர்ஜா எப்படி ஆக்சன் கிங் அர்ஜூன் ஆனார் தெரியுமா?
Recommended Video
சென்னை: நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று பிறந்ததாலோ என்னவோ நாட்டுப்பற்றும் சமூக அக்கறையும் என்னுடன் தானாகவே வந்துவிட்டது என்று நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
நம்முடைய நாட்டின் ஒவ்வொரு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சினிமாப் பாடல்களில் முதலிடம் பிடிப்பது ஆக்சன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த் படத்தில் வரும் தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் என்ற பாடல் தான்.

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் படம் என்றாலே அவருடைய திரைப்படத்தை தியேட்டரில் படம் பார்க்கும் இளைஞர்களுக்கும் கை கால்கள் பரபரவென துடிக்கும். அதோடு படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போதே ஏதாவது அநியாயம் நடந்தால், நாமும் போய் நாலு பேரை தூக்கிப் போட்டு பந்தாட வேண்டும் என்று ஒரு உத்வேகம் பிறக்கும். அந்த அளவுக்கு படங்களில் தன்னுடைய துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியன் பிறந்த இவருடைய பெயர் அசோக் என்ற ஸ்ரீநிவாச சர்ஜா. இவருடைய அப்பா சக்தி பிரசாத் கன்னட நடிகராக இருந்தாலும் கூட இவரை சினிமா வாசனையே இல்லாமல் ராணுவ கட்டுப்பாடுடன் தான் வளர்த்தார்.
சுதந்திர தினத்தில் பிறந்ததாலோ என்னவோ இவரை ஒரு போலீஸ் அதிகாரியாகவோ அல்லது ராணுவ வீரனாகவோ ஆக்கவேண்டும் என்பதே இவருடைய தந்தையின் கனவு, அதனால் தான் சிறுவயதில் இருந்தே குதிரையேற்றம், சண்டைப் பயிற்சி, கராத்தே உள்ளிட்ட அனைத்து விதமான தற்காப்பு கலைகளையும் கற்றார். பள்ளிக்கூட நாட்களிலேயே இவர் பார்ப்பதற்கு புரூஸ்லீ மாதிரியே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
அப்போது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரக இருந்த ராஜகுமார் படத்தை பார்த்துதான் தானும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதை தந்தையிடம் சொன்ன போது, என்னவேண்டுமானலும் செய், ஆனால் எதைச் செய்தாலும் அதில் நீ தனித்து தெரிய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார்.
முதன் முதலில் சிம்மத மாரி சைன்யா (தமிழில் இளஞ்சிங்கம் என்று டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது) என்ற கன்னடப் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் இயக்குநர் ராஜேந்திர சிங் தான் இவருக்கு அர்ஜூன் என்று மாற்றினார். பின்னாளில் இவருடைய துடிப்பான நடிப்பினால் ஆக்சன் கிங் என்ற பட்டப் பெயரை இவருடைய ரசிகர்கள் கொடுத்துவிட்டனர்.
தமிழில் முதன் முதலில் நன்றி படத்தில் அறிமுகமானாலும் தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியடைந்தன. இதனால் தமிழ்த் திரையுலகம் இவரை ராசியில்லாத நடிகர் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவைத்தது. ஒரு காலத்தில் இவருடைய கால்ஷீட் கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் கூட இவரை ஒதுக்கிவிட்டனர்.
இதனால் தானே சொந்தமாக படமெடுக்க முடிவெடுத்தார். அதன் விளைவாக உருவானது தான் சேவகன் படம். இந்தப் படத்தை தானே தயாரித்து தானே இயக்கியதால் யாருமே இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை. இதனால் தானே தமிழ்நாடு முழுவதும் சேவகன் படத்தை வெளியிட்டார். படமும் வெற்றி பெற்று வசூலை அள்ளிக்கொடுத்தது.
சேவகன் படத்தை அடுத்து தயாரித்து இயக்கிய பிரதாப் படமும் வெற்றி பெறவே ஆக்சன் கிங் அர்ஜூன் மீண்டும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நபராக வளம் வரத் தொடங்கினார். அடுத்தடுத்து இவர் நடித்த ஜென்டில் மேன், குருதிப்புனல், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி என நாட்டுப்பற்றை பறைசாற்றும் படங்களாகவே இருந்ததால் இளைஞர்களுக்கும் கல்லூரிப் பெண்களுக்கும் பிடித்த நடிகராகவே இருந்து வருகிறார்.
இவருடைய படங்கள் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், இவர் காமெடியிலும் கலக்குவதுதான். தமிழில் முதன் முதலில் நடித்த நன்றி படம் முதல் ஆயுத பூஜை வரை பெரும்பாலான படங்களிலும் கவுண்ட மணியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கி இருப்பார்.
நடிகர் அஜீத் உடன் இவர் நடித்த மங்காத்தா இவருடைய இன்னொரு பரிமாணத்தைக் காட்டியது. நடிகர் விஷால் இவரிடம் துணை இயக்குநராக பணியாற்றிவர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒரு விஷயமாகும். இளம் வயதில் போலீஸ் அதிகாரியாகவோ ராணுவ வீரனாகவோ விரும்பி முடியாததால் படத்தில் அந்தக் கதா பாத்திரங்களில் நடித்து தன்னுடைய நாட்டுப்பற்றை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications











