ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக ஆகிறாரா அர்ஜுன் ?
சென்னை : நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த ஆக்ஷன், த்ரில்லர் படமான ஹீரோ படத்தில் நடித்திருந்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்தது.
சூப்பர் ஹீரோ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் தொழில்நுட்ப விஞ்ஞானி கேரக்டரில் அர்ஜுன் நடித்திருந்தார். இவரது கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டது. அதற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் அர்ஜுன் நடிக்கவில்லை.

தேசிய விருது வாங்கிய படம்
இதைத் தொடர்ந்து மலையாளத்தில் அர்ஜுன் நடித்த மரக்கர் அரபிகடலின்டே சிம்மம் படம் இந்தியாவின் சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றது. விரைவில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிரண்ட்ஷிப்பில் அர்ஜுன்
இதே போல் தமிழில் அர்ஜுன் நடித்த ஃபிரண்ஷிப் படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடித்துள்ளார்.

தொகுப்பாளராகும் அர்ஜுன்
இந்நிலையில் தமிழில் ரியாலிட்டி ஷோ ஒன்றை அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளாராம். ரியாலிட்டி ஷோக்களை டாப் நடிகர்கள் தொகுத்து வழங்குவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அமிதாப் பச்சன் தொடங்கி லேட்டஸ்டாக விஜய் சேதுபதி, தமன்னா வரை டிவி.,யில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் ஷுட்டிங்
இவர்களைத் தொடர்ந்து ஜீ தமிழ் தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சியை தான் இவர் தொகுத்து வழங்க உள்ளாராம். இது மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக செப்டம்பர் மாதம் அர்ஜுன் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











