அதிக சம்பளம் கேட்கிறாங்க.. கட்டுப்படி ஆகாது.. திடீரென படப்பிடிப்புகளை நிறுத்த டோலிவுட் முடிவு!
சென்னை: இந்தியாவிலேயே பாலிவுட்டை தூக்கிச் சாப்பிட்டு நம்பர் ஒன் இடத்தை பாக்ஸ் ஆபிஸில் பிடித்துள்ள டோலிவுட் திரையுலகம் வரும் ஆகஸ்ட் 1 முதல் படப்பிடிப்புகளை நிறுத்த அதிரடி முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவுக்கு பிறகு ஒட்டுமொத்த திரையுலகமும் நொடிந்து போயுள்ளதாகவும், அதிக சம்பளத்தை நடிகர்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கேட்பதற்கு எதிராக இப்படியொரு போர்க்கொடியை தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக டோலிவுட்டுக்கு மட்டுமின்றி கோலிவுட் படங்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.

பல கோடி சம்பளம்
டோலிவுட்டில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் சம்பளம் 80 கோடியை நெருங்கியுள்ளது. மேலும், பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் 50 முதல் 60 கோடிக்கும் அதிகமாக சம்பளத்தை ஏற்றிய நிலையில், தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்குள் ஆளாகி உள்ளனர். அதே போல நடிகைகளும், ஒரு கோடி, இரண்டு கோடி எல்லாம் வேண்டாம், 10 கோடி கொடுங்க என அடம்பிடித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்
நடிகர்கள், நடிகைகளுக்கு மட்டும் பல கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிறீங்க, எங்களுக்கு மட்டும் தினக்கூலியையே ஒழுங்கா கொடுக்க மாட்டுறீங்க, எங்களுடைய சம்பளத்தையும் 45 சதவீதம் உயர்த்த வேண்டும் என கடந்த வாரம் திடீரென திரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதன் விளைவு தான் தயாரிப்பாளர்களை இப்படியொரு அதிரடி முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

ஷூட்டிங் நடக்காது
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எந்தவொரு படப்பிடிப்பும் நடக்காது என The Active Telugu Producers Guild திட்டவட்டமாக அறிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா பரவலுக்கு பிறகு தயாரிப்பாளர்களின் நிலைமை ரொம்பவே மோசமடைந்துள்ளது. ஆனால், திரைப்பட நடிகர்களும், தொழிலாளர்களும் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போவதால், எங்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதை எல்லாம் உட்கார்ந்து பேசி, சரி செய்யாத வரை எந்தவொரு படப்பிடிப்பும் நடத்த முடியாது எனக் கூறியுள்ளனர்.

ஆர்ஆர்ஆர், புஷ்பா
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர், அல்லு அர்ஜுனின் புஷ்பா, கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வசூலை ஏற்படுத்தினாலும், அந்த படங்களை தவிர மற்ற படங்கள் ஏதும் போட்ட முதலையே திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர். பிரபாஸின் ராதே ஷ்யாம், மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, சமீபத்தில் வெளியான வாரியர் உள்ளிட்ட படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவான நிலையிலும், படுதோல்வியை சந்தித்ததே திரைத்துறை சரிவை சந்திக்க காரணம் என்கின்றனர்.
Recommended Video

வாரிசு, வாத்தி, ஏகே61க்கு பாதிப்பு
தமிழ் சினிமாவின் பெரிய படங்கள் அனைத்தும் ஹைதராபாத்தில் தான் ஷூட்டிங் செய்து வருகின்றன. நடிகர் விஜய்யின் வாரிசு, தனுஷின் வாத்தி, அஜித் குமாரின் ஏகே61 உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளும் இந்த திடீர் ஸ்டிரைக் காரணமாக பாதிக்கும் என்கின்றனர். மேலும், விரைவில் தொடங்க உள்ள ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தையும் இந்த தடை உத்தரவு பாதிக்கும் என்கின்றனர். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கும் இதே நிலைமை தான் என்றும் இங்கேயும் சீக்கிரமே இதே போன்ற பிரச்சனை வெடிக்கப் போகிறது என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











