துள்ளுவதோ இளமை அபிநய்க்கு இப்படி ஒரு தோழியா?.. எவ்வளவு பாசம்?.. இரங்கல் சொன்ன முதல் நடிகை
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி பெரிய நடிகராக வருவார் என்று எதிர்பார்த்த அபிநய் பரிதாபமாக சமீபத்தில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவருக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இறப்புக்கு திரைத்துறையிலிருந்து கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து அத்தனையும் கவனித்த நிலையில் நடிகை விஜயலட்சுமி உருக்கமாக பேசியிருக்கிறார்.
மலையாள நடிகை ராதாமணியின் மகன் அபிநய் துள்ளுவதோ இளமை படத்தில் நடிகராக அறிமுகமானபோது பெரிய பெரிய வெற்றியை பெறுவார், தாயை போலவே தேசிய விருதையும் வாங்குவார் என்று பலரும் கூறினார்கள். ஆனால் என்ன நேரமோ தெரியவில்லை அவருக்கு வெற்றி என்ற ஒன்று அருகிலேயே வராமல் போய்விட்டது. அந்தப் படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் திருப்புமுனை கிடைக்கவில்லை.
உயிரிழந்த அபிநய்: இதனால் நடிப்பிலிருந்து ஒதுங்கும் சூழல் உருவாகிவிட்டது. அதேசமயம் சினிமாவிலிருந்து ஒதுங்கவில்லை. பையா, துப்பாக்கி பட வில்லன்களுக்கு டப்பிங் பேசி தனது இருப்பை தக்கவைத்தார். இருந்தாலும் பெரிய நடிகர் ஆக வேண்டுமென்பதுதான் அவரது ஆசை. விளம்பர படங்கள் கொடுத்த நிம்மதிகூட சினிமா கொடுக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பெரும்பாலும் எந்த நடிகரும், நடிகையும் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. இது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

விஜயலட்சுமி பதிவு: இந்நிலையில் அபிநய் பற்றி நடிகை விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அபிநய்யுடன் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். சென்னை 28 படத்தை முடித்திருந்த சமயம் அது. அந்த விளம்பர பட ஷூட்டிங் டெல்லியில் நான்கு நாட்கள் நடந்தது. இப்போது இருப்பதுபோல் அப்போது நான் இருக்கவில்லை. அறிமுகமில்லாதவர்களை பார்த்தால் பயம் வந்துவிடும். கூச்ச சுபாவம் கொண்டிருந்தேன். நான் தங்குவதற்கு ஒரு அப்பார்ட்மெண்ட் கொடுக்கப்பட்டது.
அப்போதுதான் அபிநய்: அங்கு அபிநய்யும் தங்கியிருந்தார். நான் அப்போது ஃபெரோஸ் (கணவர்) காதலித்துக்கொண்டிருந்தேன். இன்னொரு ஆணுடன் இருப்பதை அவரிடம் சொல்வதை தவிர்த்தேன். பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் அபிநய் ஜென்டில்மேன். தொழிலில் நேர்மை கொண்டவர். ஒவ்வொரு ஃப்ரேமையும் தனதாக்கிக்கொள்வார். ஷூட்டிங் முடிந்து அந்த அப்பார்ட்மெண்ட் ஹாலில் அமர்ந்து அவர் குடித்துக்கொண்டிருப்பார். உடன் யாரும் இருக்கமாட்டார்கள்.முழு பாட்டிலையும் தீர்த்துவிடுவார்.
மனம் திறந்த அபிநய்: இப்படி தனியாக குடிப்பதை பார்க்கையில் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். ஒருநாள் நான் அவரை பார்ப்பதை கவனித்துவிட்டார். என்னை அருகே அமர சொன்னார். அப்போது நான், 'ஏன் இப்ப்டி குடிக்கிறீர்கள்' என கேட்டேன். அதற்கு அவரோ முதலில் குடிக்கிறாயா என்று கேட்டார். எனக்கு பழக்கமில்லை. அடுத்து ஒரு கூல் ட்ரிங்க்கை கொடுத்தார். அதை வாங்கவும் பயம். பிறகு தனது வாழ்க்கையில் நடந்தது, அம்மாவுக்கு ஏற்பட்ட வலிகள் பற்றி நிறைய நேரம் மனம் திறந்து பேசினார்.
எல்லாம் வந்தது: அவருக்குள்ளிருந்து எல்லாம் வெளியே வரட்டும் என எதுவும் நான் சொல்லாமல் முழுமையாக கேட்டேன். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது அவர் என்னிடம், நன்றி விஜயலட்சுமி. இதற்கு முன் யாரும் இப்படி என்னிடம் கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களை படைக்கிறார். ஒருவேளை உனக்கு சகோதரி இருந்தால் எனக்கு தெரியப்படுத்து என்று சொல்லிவிடு சென்றார். அதுதான் எங்களது கடைசி சந்திப்பு.
விடுதலை: அதற்கு பிறகு இப்போது இறந்துவிட்டார் என்று கேள்விப்படுகிறேன். எனக்கு அழுகை வருகிறது. ஆனால் இது வருத்தமான ஒன்றில்லை. அவருடைய போராட்டம் முடிவுக்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி. அவர் அமைதியை கண்டடைந்துவிட்டார். நான் அமைதியாக இளைப்பாருங்கள் என்று சொல்லமாட்டேன். சந்தோஷமாக கொண்டாடு என்றுதான் சொல்வேன். இம்முறை வலிகளை நினைத்து குடிக்கமாட்டார்.தன் விடுதலையை ருசித்து குடிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











