நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு!
பிரபல நடிகர் அபி சரவணன் காரில் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கொடுப்பட்டது.
சென்னை: பிரபல நடிகர் அபி சரவணன் காரில் கடத்தப்பட்டதாக போலீசாருக்கு வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
'பட்டதாரி', 'கேரள நாட்டிளம் பெண்களுடனே' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் அபி சரவணன். இவர் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சென்னை வளசரவாக்கம் பாலாஜி நகரில் வசித்து வருகிறார்.
பட்டதாரி படத்தில் நடித்த போது அபி சரவணனுக்கும் அப்படத்தின் ஹீரோயின் அதிதி மேனனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

தந்தை புகார்:
இதுதொடர்பாக நடிகர் அபி சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அபி சரவணனை சிலர் காரில் கடத்தி சென்றுவிட்டதாக, அவருடைய தந்தை ராஜேந்திர பாண்டியன் தகவல் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை:
இதையடுத்து, அபி சரவணன் வீட்டுக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே அபி சரவணன் வீட்டுக்கு திரும்பி விட்டார்.

மனைவியின் நண்பர்கள்:
அவரிடம் போலீசார் விசாரித்த போது, " அதிதி மேனன் என்னை ஏமாற்றி விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். அந்த வழக்கில் அவரது நண்பர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளேன். தங்களது பெயர்களை எதற்கு சேர்த்தாய்? என்று கேட்பதற்காக அவரது நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர்.

பெற்றோர் புகார்:
இதனால் வேறு இடத்தில் வைத்து பேசலாம் என்று கூறி நண்பர்களுடன் காரில் ஏறி சென்றேன். போகும்போது பெற்றோரிடம் கூறாமலும், செல்போனை எடுக்காமலும் இருந்ததால், என்னை கடத்திவிட்டதாக எனது தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டார் " என அவர் கூறியுள்ளார். எனினும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











