Ajith: இனிமே இப்படி நடக்கக்கூடாது.. பஹல்காம் தாக்குதலை கண்டித்த அஜித்குமார்!
சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில், நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமார், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது கருதப்படுகிறது. இந்த விருது 1954 ஆம் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர்ந்த விருதாகும். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை போன்ற பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்திய அரசு இந்த விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

அஜித்குமார்: அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ந் தேதி அறிவித்தது. 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அஜித்குமார், பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இந்த விழாவில், ஷாலினி, மகன் மற்றும் மகள் மட்டுமின்றி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்டும் கலந்து கொண்டார். அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இப்படி நடக்கக்கூடாது: பத்ம பூஷன் விருதை பெற்ற நடிகர் அஜித் குமார், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், பஹல்காம் தாக்குதல் கண்டனத்திற்கு உரியது. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததைச் செய்கிறது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அனுதாபம் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியான சமூகமாக வாழ வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இன்று, ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு சல்யூட். நாம் நிம்மதியாக தூங்க, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்கள் நமது எல்லையை பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள்.
குறைந்தபட்சம் அவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, நம் நாட்டிற்குள் நாம் ஒருவருக்கொருவர் மதிக்கவும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். குறைந்தபட்சம் நமக்குள் சண்டை வேண்டாம். அமைதியான சமூகமாக வாழ்வோம் கற்றுக்கொள்ள வேண்டும் அஜித் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
நந்தமூரி பாலகிருஷ்ணா: அஜித்தை தவிர தொழில்துறையில் நல்லி குப்புசாமி பத்ம பூஷன் விருது பெற்றார். அதே போல சமையல் துறையில் செஃப் தாமோதரன் பத்ம ஸ்ரீ விருதை பெற்றனர். மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த தட்சணாமூர்த்திக்கு கலைப் பிரிவில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதேபோல, தெலுங்கு திரையுலக சூப்பர்ஸ்டார் நந்தமூரி பாலகிருஷ்ணா, கேரளாவை சேர்ந்த இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், கன்னட திரையுலகை சேர்ந்த அனந்த் நாக் உள்ளிட்டோருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.


Click it and Unblock the Notifications











