அஜித் ஜொலிக்கிறாரே! விறுவிறுனு முடிந்த குட் பேட் அக்லி சூட்டிங்; போட்டோஸ் வெளியிட்ட படக்குழு!
சென்னை: தமிழ் சினிமாவிற்குள் தனக்கான எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்து தற்போது கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் அஜித் குமாரின் பெயர் எப்போதும் இருக்கும். தொடக்கத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருந்த அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் நெகடிவ் ரோல்களைத் தேர்வு செய்து அதில் ஹீரோயிசம் காட்டும் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஒரு படத்திற்கான படிப்பிடிப்பின்போது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்க அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும், ரிஸ்க்கான முடிவுகளை எடுத்து நடிக்கும் அஜித் குமாரை மையப்படுத்தி இன்றைக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம் தமிழ் சினிமாவில் நடைபெற்று வருகின்றது. கடைசியாக இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் சுமார் ரூ. 250 கோடி வரை தியேட்டரில் வசூல் செய்தது.

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்: வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்திற்கு கமிட்டாகும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஒரு படத்தை முடித்துவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு நாடு நாடாக சுற்றிவருவதை வழக்கமாக கொண்டவர் அஜித். ஆனால் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

குட் பேட் அக்லி முதற்கட்ட படப்பிடிப்பு: இதில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்றுடன் அதாவது ஜூன் மாதம் 8ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் குட் பேட் அக்லி படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அஜித் குமாரும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடனும் டெக்னீசியர்களுடனும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இன்று மாலை சென்னை வரும் அஜித் குமார் வரும் 16ஆம் தேதி வரை ஓய்வில் இருக்கப் போகின்றார். இந்நிலையில் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மற்றும் ராமோஜி குழுமங்களின் தலைவருமான ரமோஜி ராவ் இன்று உடல் நலக் குறைவால் உயிரிழந்ததால் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அஜித் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது. சென்னை வந்த பின்னர் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல உள்ளார் அஜித்குமார்.

விடாமுயற்சி: விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து 45 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதியிலிருந்து அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் குமாருடன் திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் படத்தை மிக விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜர்பைஜானில் அதிரடி சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இந்த தகவல் விடாமுயற்சி குறித்து எந்த அப்டேட்டும் வரமால் இருந்ததால் சோகத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் குமார் ஜப்பான் சென்று குட் பேட் அக்லி படக்குழுவினருடன் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக சமீபத்தில் மலையாளத்திலும் அதன்பின்னர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்ட பிரேமலோ படத்தில் கதாநாயகன் நஸ்லன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அஜித்தின் மகன் கதாபாத்திரத்திற்கு அவரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தீபாவளி - பொங்கல் ரிலீஸ்: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் ஓய்வில்லாமல் நடித்து வரும் அஜித்குமார் வரும் தீபாவளிக்கும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயாராகவே இருக்கின்றார். தீபாவளிக்கு விடாமுயற்சியும் பொங்கலுக்கு குட் பேட் அக்லியும் ரிலீசாகவுள்ளதால், அஜித் குமாரின் ரசிகர்கள், தீபாவளியும் எங்களதுதான் பொங்கலும் எங்களதுதான் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.
இதுமட்டும் இல்லாமல் அஜித் தனது அடுத்த படத்தில் நடிப்பது தொடர்பாகவும் யோசித்து வருகின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ஷங்கரின் பெயரும் இயக்குநர் ஹெச். வினோத் பெயரும் அடிபடுகின்றது.


Click it and Unblock the Notifications











