விடாமல் துரத்தும் விடாமுயற்சி.. அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் திருப்பதிக்கு சென்ற அஜித்..!
சென்னை: தமிழ் சினிமாவிற்குள் தனக்கான எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் காலடி எடுத்து வைத்து, தற்போது கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் அஜித் குமாரின் பெயர் எப்போதும் இருக்கும். தொடக்கத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருந்த அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்தார். அதன் பின்னர் தனது ரூட்டை மாற்றி, நெகடிவ் ரோல்களைத் தேர்வு செய்து அதில் ஹீரோயிசம் காட்டும் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்தி பிரமாண்டமான வெற்றிகளைக் குவிக்கும் நடிகராக வலம் வருகின்றார்.
ஒரு படத்திற்கான படிப்பிடிப்பின்போது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்க அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிந்தும், ரிஸ்க்கான முடிவுகளை எடுத்து நடிக்கும் அஜித் குமாரை மையப்படுத்தி இன்றைக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வியாபாரம் தமிழ் சினிமாவில் நடைபெற்று வருகின்றது. கடைசியாக இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் சுமார் ரூ. 250 கோடி வரை தியேட்டரில் வசூல் செய்தது.

வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்திற்கு கமிட்டாகும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஒரு படத்தை முடித்துவிட்டு தனது பைக்கை எடுத்துக் கொண்டு நாடு நாடாக சுற்றிவருவதை வழக்கமாக கொண்டவர் அஜித். ஆனால் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி முதற்கட்ட படப்பிடிப்பு: இதில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில வாரங்களுக்கு முன்னர் நிறைவு பெற்றது. இதையடுத்து அஜர்பைஜானில் வரும் 20ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தது. படத்தில் நடிக்கும் அர்ஜுனும் இந்த தகவலை சமீபத்தில் உறுதி செய்தார்.

விடாமுயற்சி: விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடர்ந்து 45 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதியிலிருந்து அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் அஜித் குமாருடன் அர்ஜுன், திரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் படத்தை மிக விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜர்பைஜானில் அதிரடி சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இந்த தகவல் விடாமுயற்சி குறித்து எந்த அப்டேட்டும் வராமல் இருந்ததால் சோகத்தில் மூழ்கிய அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
குட் பேட் அக்லி: விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் குமார் ஜப்பான் சென்று குட் பேட் அக்லி படக்குழுவினருடன் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக சமீபத்தில் மலையாளத்திலும் அதன்பின்னர் தமிழிலும் டப் செய்து வெளியிடப்பட்ட பிரேமலோ படத்தில் கதாநாயகன் நஸ்லன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அஜித்தின் மகன் கதாபாத்திரத்திற்கு அவரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் தரிசனம்: நடிகர் அஜித் குமார் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர். குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபாடு நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் நடிகர் அஜித்குமார் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் திருப்பதியில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கிளம்பும்போது அங்கு வேலை செய்து கொண்டு இருந்தவர்களுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்து கிளம்பும் வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தீபாவளி - பொங்கல் ரிலீஸ்: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் தீவிரமாக நடித்து வரும் அஜித்குமார் வரும் தீபாவளிக்கும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயாராகவே இருக்கின்றார். தீபாவளிக்கு விடாமுயற்சியும் பொங்கலுக்கு குட் பேட் அக்லியும் ரிலீசாகவுள்ளதால், அஜித் குமாரின் ரசிகர்கள், தீபாவளியும் எங்களதுதான் பொங்கலும் எங்களதுதான் என்ற உற்சாகத்தில் உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் அஜித் தனது அடுத்த படத்தில் நடிப்பது தொடர்பாகவும் யோசித்து வருகின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் ஷங்கரின் பெயரும் இயக்குநர் ஹெச். வினோத் பெயரும் அடிபடுகின்றது.


Click it and Unblock the Notifications











