பாலா படத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை: ஆகாஷ்
பாலாபடத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குனர் பாலா தனக்கு வாய்ப்பு தருவார் என எதிர்பார்க்கவில்லை என்று வர்மா பட நடிகர் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தை "வர்மா" என்ற பெயரில் இயக்குனர் பாலா ரிமேக் செய்துள்ளார். இப்படத்தின் மூலம், விக்ரமின் மகன் த்ருவ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். த்ருவுக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்பட இசையமைப்பாளர் ராதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான வர்மா டீசர் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில், வர்மா திரைப்படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் ஆகாஷ் பிரேம்குமார், தன்னை பாலா தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை 28 இரண்டாம் பாகம், பண்டிகை போன்ற படங்களில் நடித்துள்ள ஆகாஷ், தற்போது வைபவுடன் ஆர்கே நகர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் ராகுல் ராமகிருஷ்ணா நடித்த ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். அசோக் எனும் என்னுடைய கதாபாத்திரம் த்ருவுடன் பயணிக்கும். தெலுங்கில் இருந்த விஷயங்களை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார் பாலா. அதே நேரத்தில் தமிழ் ரசிகர்களுக்காக சில மாற்றங்களையும் செய்துள்ளார். ரீமேக் படமாக இருந்தாலும் பாலாவின் டச் இப்படத்தில் நிச்சயம் இருக்கும்.
தெலுங்கில் ராகுல் முழுக்க முழுக்க நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் என்னுடைய அசோக் என்ற கதாபாத்திரத்திற்கு நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் அதிகமான எமோஷனல் காட்சிகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தான் ஆடிஷனுக்குச் சென்றேன். ஆடிஷன் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு அழைத்து ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்திற்கு ஆடிஷன் கொடு எனக் கேட்டு பாலா என்னைத் தேர்வு செய்தார். பாலா போன்ற பெரிய இயக்குனர் என்னைத் தேர்வு செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என ஆகாஷ் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











