Allu Arjun: ரேவதியின் மரணம்.. அல்லு அர்ஜுன் வருத்தம்.. ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு!
ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது புஷ்பா 2 படம். இந்தப்படத்தின் பிரீமியர் ஷோ நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்ற நிலையில், படத்தை பார்க்க குடும்பத்துடன் வந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த ஷோவை ரசிகர்களுடன் பார்க்க அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா வந்த நிலையில், படத்தை பார்ப்பதை காட்டிலும் இவர்களை பார்க்கவே கூட்டம் அலைமோதியது. இதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் நிலையிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் படம் ரிலீசான நிலையில் முதல் நாள் கலெக்ஷனாக 294 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வார இறுதிக்குள் படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரீமியர் ஷோவில் உயிரிழந்த ரசிகை: சர்வதேச அளவில் புஷ்பா 2 படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இநத்ப் படத்தின் பிரீமியர் ஷோ நேற்று முன்தினம் ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஷோவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர்.இந்த ஷோவை ரசிகர்களுடன் இணைந்து பார்க்க அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா வந்தனர். படத்தை பார்ப்பதை காட்டிலும் இவர்களை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். இந்த ஷோ இரவு 10,30 மணிக்கு திரையிடப்பட்டது. இதனிடையே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கூட்ட நெரிசரில் சிக்கி பலி: இதையடுத்து அவர்கள் தடியடி நடத்திய நிலையில், ரசிகர்கள் அனைத்து பக்கங்களிலும் ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இத்ல் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது இவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதாக தெரிகிறது. இதை எடுத்து பேச்சு மூச்சின்றி சுயநினைவை இவர்கள் இழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் ரேவதி முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அல்லு அர்ஜுன் வருத்தம்: கூட்ட நெரிசலில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் மௌனம் சாதித்து வந்த நிலையில் தற்போது நடிகர் அல்ல அர்ஜுன் இது குறித்து பேசியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் தங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளதாகவும் இதனால் படத்தில் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவ்லலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தன்னுடைய சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும் புஷ்பா 2 படக்குழுவினரிடம் இருந்து ரேவதியின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளதாகவும் விரைவில் அவர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











