Exclusive: ஆமா பெண்ணுக்கு நான்தான் நம்பர் கொடுத்தேன் ஆனால்.. நடிகர் மாரிமுத்து பிரத்யேக பேட்டி
சென்னை: பெண்ணுக்கு ட்விட்டரில் நம்பர் கொடுத்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து பிரத்யேக பேட்டி கொடுத்தார்.
கவிப்பேரரசு வைரமுத்துவிடம் மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து. அடிப்படையில் கட்டட பொறியியல் படித்த மாரிமுத்து தமிழ் மீதும், கலை மீதும் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சினிமாவில் நுழைந்தவர். வைரமுத்துவிடம் 1989,1990,1991 ஆகிய மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்துவிட்டு உதவி இயக்குநராக மாறியவர்.

உதவி இயக்குநர் டூ இயக்குநர் மாரிமுத்து
அதனையடுத்து இயக்குநர் வசந்த்திடம் ஆசை, ரிதம் உள்ளிட்ட நான்கு படங்களிலும், எஸ்.ஜே.சூர்யாவிடம் வாலி உள்ளிட்ட படத்திலும், சீமானிடம் பாஞ்சாலங்குறிச்சி படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றினார் மாரிமுத்து. உதவி இயக்குநராக இருந்துவிட்டு பிரசன்னா, வடிவேலு, உதயதாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும், விமல், அனன்யா நடிப்பில் உருவான புலிவால் உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார்.

நடிப்பில் அட்டகாசம் செய்யும் மாரிமுத்து
ஒருகட்டத்தில் இயக்கத்திலிருந்து ஒதுங்கிய மாரிமுத்து மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மாரிமுத்துவின் நடிப்பு அனைவரையும் ஈர்க்க நடிப்பதற்கு அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட மாரிமுத்து தனது எதார்த்த நடிப்பில் தற்போது ஜொலித்துவருகிறார். குறிப்பாக பரியேறும் பெருமாள், மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு பெரிதும் கொண்டாடப்பட்டது. சினிமாவில் மட்டுமின்றி தற்போது எதிர்நீச்சல் நாடகத்திலும் தனது நடிப்பில் அட்டகாசம் செய்துவருகிறார் மாரிமுத்து.

சர்ச்சையில் சிக்கிய மாரிமுத்து
இந்தச் சூழலில் மாரிமுத்து ஒரு பெண்னிடம் ட்விட்டரில் நம்பர் கொடுத்ததாக கடந்த சில நாள்களாக புகைப்படம் ஒன்று உலாவிவருகிறது. அதுகுறித்து அவரது மகன் அகிலன் அளித்த விளக்கத்தில், 'எனது தந்தையின் தொலைபேசி எண் பலரிடம் இருக்கிறது. அது தற்போது தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது' என குறிப்பிட்டிருந்தார்.

ஆமா நம்பர் கொடுத்தேன் - மாரிமுத்து பேட்டி
நிலைமை இப்படி இருக்க இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவை தொலைபேசி வாயிலாக தமிழ் பிலிமிபீட் சார்பில் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து கேட்டோம். அப்போது பேசிய அவர், 'ஆமாம் நான் ஒரு பெண்ணுக்கு நம்பர் கொடுத்தேன். ஒரு இயக்குநராக, நடிகனாக சினிமாவில் இருக்கும் நான் ஒரு பெண்ணிடம் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுமட்டுமின்றி என் நம்பரை கொடுப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. . அந்தப் பெண் என்னிடம் என்னுடைய நம்பர் கேட்டார்.
அதனால் கொடுத்தேன். ஆனால் இப்போது புகைப்படம் ஒன்று உலாவுகிறதே அதில் இருக்கும் பெண் இல்லை அவர். அதை சிலர் வேண்டுமென்றே உருவாக்கியிருக்கிறார்கள். இந்த விஷயம் குறித்து என்னிடம் ஒருவர் தகாத முறையில் ஒன்றை கேட்டார். அதற்கு நான் காட்டமாகவே பதிலளித்தேன். இவர்களை எல்லாம் என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றார்.


Click it and Unblock the Notifications











