எல்லாம் தெரிஞ்ச வடிவேலு இன்னைக்கு மக்கு ஆகிட்டாரு.. மனம் திறந்த இயக்குநர்
சென்னை: ஒரு காலத்தில் எல்லாம் தெரிஞ்ச வடிவேலு இப்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்கும் அளவு மக்கு ஆகிவிட்டார் என இயக்குநர் மாரிமுத்து தெரிவித்திருக்கிறார்.
நகைச்சுவையை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்சென்றவர்களில் வடிவேலு முக்கியமானவர். கவுண்டமணி, செந்திலின் காமெடி இன்றுவரை பலராலும் ரசிக்கப்பட்டாலும் கவுண்டமணி உருவ கேலி செய்பவர் என்ற விமர்சனம் அவர் மீது இப்போதும் சிலர் வைப்பதுண்டு. ஆனால் வடிவேலுவின் காமெடியில் அப்படி எந்த விமர்சனத்தையும் பார்க்க முடியாது.

வைகைப் புயல் வடிவேலுவின் மேஜிக்
1988ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் உருவான என் தங்கை கல்யாணி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும் வடிவேலுவின் முதல் படமாக பெரும்பாலானோரால் கருதப்படுவது ராஜ்கிரண் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே. பாமரத்தனமான முகமும், பேச்சும், உடல்மொழியும் பலரையும் கவர்ந்தன. இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர ஆரம்பித்தன.

தமிழ் சினிமாவை ஆட்சி செய்த வடிவேலு
1990களில் வடிவேலு வளர ஆரம்பித்தார். பெரும்பாலான படங்களில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு ஒருகட்டத்தில் தனது நகைச்சுவை மூலம் அனைவரையும் கவர்ந்தார். இதனால் வடிவேலுவின் காமெடிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. குறிப்பாக அவரது உடல்மொழியும், பிறரை உருவ கேலி செய்யாமல் தன்னை தானே கேலி செய்துகொண்டு நடித்தது என பல படிகள் முன்னேறினார் வடிவேலு.

வடிவேலுவுக்கு உருவான பொற்காலம்
90களின் ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் 90களின் இறுதியில் வடிவேலு அசுர வேகத்தில் வளர்ந்தார். 2000த்திலிருந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் வடிவேலுவுக்கும், தமிழ் சினிமா நகைச்சுவைக்கும் பொற்காலம் எனலாம். ஒரு வருடத்தில் 10 படங்கள் வந்தது என்று வைத்துக்கொண்டால் அதில் 9 படங்களிலாவது வடிவேலு இருப்பார். சந்திரமுகி படத்தின் கதையை பி.வாசு ரஜினியிடம் கூறியபோது, முதலில் வடிவேலுவின் கால்ஷீட்டை பெற்றுவிடுங்கள் என ரஜினி சொல்லும் அளவுக்கு வடிவேலு பிஸியாக இருந்தார்.

பிரச்னைகளும், அதிலிருந்து மீண்ட வடிவேலுவும்
நிலைமை சீராக போய்க்கொண்டிருக்க 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது ஒரு கட்சியின் மேடையில் வடிவேலு ஏறிய பிறகு அவரது சினிமா கிராஃப் இறங்கத் தொடங்கி ஒருகட்டத்தில் வடிவேலுவே இல்லாமல் போனார். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப மீம்ஸ்கள் பெருக்கத்திலும் வடிவேலுவே உபயோகப்பட்டுக்கொண்டிருக்கிறார். அப்போதுதான் பலருக்கும் புரிந்தது வடிவேலு என்பவர் எந்த காலத்திலும் தவிர்க்க முடியாத கலைஞன் என்பது. இதனையடுத்து வடிவேலுவை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் சரிசெய்யப்பட சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார் வடிவேலு. ஆனால் எதிர்பார்த்த அளவு அந்தப் படம் வெற்றியடையவில்லை.

வடிவேலு மக்கு ஆகிட்டார் - மனம் திறந்த இயக்குநர்
இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து பேசியிருக்கிறார். பேட்டியில் பேசிய அவர், "வடிவேலுவிடம் ஒரு கதை சொன்னேன். அந்தக் கதையில் கிழவியும் வடிவேலு; பேரனும் வடிவேலு. அந்தக் கதையில் அவ்வளவு நகைச்சுவைகள் இருக்கும். அந்தக் கதைக்கு கத்திமுனையில் கருப்பு சிங்காரம் என்று பெயர் வைத்திருந்தேன். ஆனால் சம்பள பிரச்னையால் அவர் நடிக்கவில்லை.
நின்னு மூஞ்சிய பார்த்து சொல்லிட்டு போனா சிரிப்பு கிடையாது. நான் மொனங்கிட்டே போறேன் அதுதான் சிரிப்பு என்று சரியாக சொல்வார் வடிவேலு. அதுவும் சரியாக இருக்கும். நகைச்சுவையின் அளவையும், பல்ஸையும் தெரிந்த ஆளாக இருந்தவர் வடிவேலு. இன்று எதுவும் தெரியாமல் நாய் சேகர் படத்தில் நடிக்கும் அளவுக்கு மக்கு ஆகிவிட்டார். அதுதான் வேதனையாக இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











