சினிமாவில் ஜெயிக்க முடியாதவங்க விமர்சனத்தில் இறங்குகிறார்கள்.. இயக்குநர் பார்த்திபன் நெத்தியடி!
சென்னை: தற்காலங்களில் படம் வெளி வருவதற்கு முன்னதாகவே அந்த படம் குறித்த ரிவ்யூ வெளியாகி விடுகிறது. ஒரு படம் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இத்தகைய விமர்சகர்களின் கையில் என்பது தற்போது வழக்கமாகியுள்ளது. இதில் நியாயமான விமர்சனங்களை கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு சிலர் மோசமான விமர்சனங்களை பதிவு செய்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் இத்தகைய விமர்சனங்கள் மற்றும் விமர்சகர்கள் குறித்து நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமாவில் சாதிக்கும் மனநிலையுடன் வந்து அது நிறைவேறாத நிலையில் கேமராக்களை வைத்துக் கொண்டு விமர்சிப்பவர்கள் அதிகமாகி உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரசிகர்களின் மனப்பாங்கு: தற்காலங்களில் புதிய திரைப்படங்கள் ரிலீசாகும் முன்னதாகவே அந்த படங்கள் குறித்த பல்வேறு விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. படங்களை நேரடியாக சென்று அது தனக்கு ஏற்படுத்தும் பாதிப்பை நேரடியாக பெற முடியாமல் இத்தகைய விமர்சனங்களின் தாக்கத்தால் அந்த படம் குறித்த ஒரு பிம்பத்தை முன்னதாகவே ஏற்படுத்திக் கொண்டு படம் பார்க்க செல்வது தற்காலங்களில் வாடிக்கையாகியுள்ளது. இதனால் அந்த படம் தனக்கு என்ன மாதிரியான அனுபவத்தை கொடுக்கும் என்பதை காட்டிலும் அந்த படம் மற்றவர்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தை தந்துள்ளது என்று விமர்சனங்கள் வாயிலாக பார்த்துவிட்டு அதன் பிறகு படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் நிலை ரசிகர்களிடையே காணப்படுகிறது.
சினிமா விமர்சனங்கள்: இத்தகைய விமர்சனங்கள் மூலம் ஒரு படம் நல்ல படமா அல்லது கெட்ட படமா என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விடுகின்றனர். தற்காலங்களில் திரையரங்குகளில் அதிகமான டிக்கெட் கட்டணங்கள் காணப்படும் நிலையில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் சினிமாவிற்கு சென்று வர 2000 முதல் 3000 வரை செலவிட நேர்கிறது. இதனால் இத்தகைய விமர்சனங்கள் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு முடிவை எடுக்க வசதியாக உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களால் வெகுவாக பாதிக்கப்படுவது திரைப்படங்களின் வசூல்தான்.
அடிவாங்கும் படங்கள்: விஜய், ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் எப்படியாவது திரையரங்குகளில் கணிசமான நாட்கள் ஓடி விடுகின்றன. இந்த படங்களுக்கு அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் நிலையில் இத்தகைய வசூல் சாதனை சாத்தியம்தான். ஆனால் சிறிய பட்ஜெட்டில் சிறிய நடிகர்களை கொண்டு எடுக்கப்படும் படங்கள் இந்த விமர்சனங்களால் அடி வாங்குகின்றன. சில படங்கள் இவற்றில் இருந்து தப்பித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறுவதும் நடந்து வருகிறது. ஆனால் அப்படி சொற்பமாக சில படங்கள் வெற்றி பெறுவதை மட்டுமே நாம் கைகாட்டி விட முடியாது.
இயக்குநர் ஆர் பார்த்திபன்: அந்த வகையில் இத்தகைய சினிமா விமர்சனங்கள் தற்போது மிகுந்த அளவில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். சினிமாவிற்கு வந்து சாதிக்க முடியாதவர்கள்கூட தற்போது ஒரு கேமராவை வைத்துக் கொண்டு இத்தகைய விமர்சனங்களில் இறங்கி விடுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கிராமத்தில் இருந்து வரும் தன் போன்றவர்களுக்கு சினிமா ஏற்படுத்தும் தாக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 13 பேரை வைத்து படத்தை எடுத்துள்ளதாக தன்னுடைய படம் குறித்த விமர்சனங்கள் இருந்த நிலையில் அது குறித்த தன்னுடைய ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











