முடிவெடுத்த கமல்.. அழுது தீர்த்த டி.ராஜேந்தர்- என்ன காரணம் தெரியுமா?
சென்னை: கமல் ஹாசன் எடுத்த முடிவை பார்த்து அவரிடம் நேரில் சென்று அழுததாக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்திருக்கிறார்.
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், பள்ளி குழந்தைகளுடன் சமீபத்தில் பாடிய 'வந்தே மாதரம்' என்ற பாடல், இரண்டு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்றது. அந்த வகையில், தன்னுடன் அந்த பாடலை பாடிய பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழை டி.ராஜேந்தர் வழங்கினார். இந்த நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

டி.ராஜேந்தரின் இரண்டு கண்கள் கமலும், ரஜினியும்
அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர், "நான் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகன் அதன் பிறகு சிவாஜி ரசிகன். அவர்கள் இரண்டு பேருக்கும் அடுத்ததாக சினிமாவின் இரண்டு கண்களாக மதிப்பது கமலையும், ரஜினியையும்தான். அரசியலுக்கு அடி எடுத்து வைத்தபோது இனி நடிக்கமாட்டேன் என கமல் ஹாசன் சொல்லியிருந்தார். அப்போது நண்பர் என்ற முறையில் அவரிடம் நான், நான் உங்களோட தீவிர ரசிகன். சினிமாவே வேண்டாம்னு நீங்கள் சொல்லக்கூடாது.

கமல் சொன்னதால் டி.ராஜேந்தருக்கு மனக்காயம்
நீங்கள் அப்படி சொல்லியது என் மனதை ரொம்பவும் காயப்படுத்துகிறது என்று சொன்னபோது என் கண்களிலிருந்து தண்ணீர் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அப்போது என்னை கமல் ஹாசன் கட்டிப்பிடித்துக்கொண்டு, 'நான் அப்படி சொல்லிருக்கக்கூடாது ராஜு என என்னை தேற்றினார். அதோடு மட்டும் இல்லாமல் விக்ரம் படத்தில் நடித்து லோகேஷ் கனகராஜ் போன்ற அடுத்த தலைமுறையோடு கைகோர்த்திருக்கிறார். அதேபோல் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தோடு இணைந்து படத்தை வெளியிட்டார். அதெல்லாம் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது.

மீண்டும் திரைப்படம் எடுக்கும் எண்ணம்
நான் மீண்டும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு நம்பிக்கை எனக்கு வருகிறது என்றால் அதற்கு காரணம் ரஜினியும், கமல் ஹாசனும்தான். அவர்கள் இருவரும்தான் எனது முன்னோடிகள். அவர்கள் இருவரும் ஸ்டார்டம்மை பரமாரிப்பது சாதாரண ஒரு விஷயம் இல்லை. அன்று மதியை நம்பியவன், இன்று விதியை நம்புகிறேன். விதியின்படி தான் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும்.

கமலுடன் சிம்பு இணையும் படம்
அப்படிப்பட்ட கமல் ஹாசன் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் எனது மகன் சிலம்பரசனை வைத்து படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் திரை உலக வாழ்க்கையிலேயே இதுவரை இல்லாத அளவு பிரமாண்டமாக இந்தப் படத்தை உருவாக்குவேன் என சொல்கிறார்.அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை." என்றார்.

சிம்பு படத்தை தயாரிக்கும் கமல் ஹாசன்
முன்னதாக, கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கும் பணியில் இருக்கிறது. இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு இணையும் படமானது அவருக்கு 48ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











