மத்திய பட்ஜெட் 2026 : கண்ணதாசன் பாட்டை நினைவூட்டிய கமல்ஹாசன்!
சென்னை: 2026 மற்றும் 27 ஆம் ஆண்டுக்கான நிதி நிலையை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், 17 புற்றுநோய் மருந்துகள், மின்சார வாகன பேட்டரிகள், விளையாட்டு உபகரணங்கள், சோலார் பேனல்கள், ஸ்மார்ட் போன்கள், தோல் உபகரணங்கள் போன்றவற்றின் விலை குறையும் என்றும், சிகரெட், பீடி, பான் மசாலா, இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் என நிர்மலா சீதா ராமன் பட்ஜெட் பல அறிவிப்புகளை அறிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் அறிக்கை: அதில், எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார்.
'பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்.
பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி...
பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி!'
நான் ஆசிரியர்களிடமிருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்கங்களுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இத்தருணத்தில் நினைவிலாடுகிறது.
'கள்ளிச் செடி பசுவாகிப்
பால் சுரக்கும்
வேப்பம்பூத் தேனெடுக்கும்
பண வண்டு
வறுமைக் கதிர் அறுக்கக்
கானல் நீர் வாய்க்கால்கள்
கற்பனை அறுவடையில்
கனவு நெல் மணிகள்
தெருவோர ஜமீன்தார்கள்
வரி செலுத்த
பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம்
எங்கும் ஓங்கும்'
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட் என்றில்லை; எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











