5 படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கிய சரத்குமார்!
சென்னை: கோயம்பேட்டில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் இறந்த போது அவர் குடும்பத்துடன் துபாயில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்தமுடியாமல் போனது. இதனால், துபாயில் இருந்து இன்று சென்னை திரும்பிய சரத்குமார் நேரடியாக விஜயகாந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, விஜயகாந்த் உடல் ஊர்வலமாக விஜயகாந்தின் கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இறுதி ஊர்வலத்தில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் எனவும் அங்கு பொதுமக்கள் வழிபட அணையா தீபம் ஏற்றப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
சரத்குமார் அஞ்சலி: இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் அவர்களின் சொந்த தயாரிப்பில் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்தேன். தனக்கு போட்டியாக வந்துவிடுவார் என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல், நான் கதாநாயகனாக வளர்ந்த பிறகும், தாய் மொழி என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எனக்காக விஜயகாந்த் நடித்திருந்தார். நான் பார்த்த பல மனிதர்களில் விஜயகாந்த் ஒரு சிறந்த மனிதராக நான் கருதுகிறேன்.
மகத்தான மனிதர்: அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்ததால், அவரை நான் சந்திக்கவில்லை. மீண்டும் அவர் உடல்நலம் தேறி சினிமாவில் அரசியலிலும் வலம் வருவார் என்று நினைத்த நேரத்தில் இப்படி ஒரு துயரம் நடந்து விட்டது. அவரின் குணாதிசயம், பண்பு ஆகியவற்றை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும். தற்போது அவர் இல்லை என்பது எனக்கு பெரிய வேதனையாகத்தான் இருக்கிறது. அவருடன் நடித்த காலங்கள், உணவருந்திய காலத்தை நினைத்து பார்க்கும் போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது. மேலும், இந்த நேரத்தில் நான் எந்தவிதமான கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. இதுகுறித்து பரிசீலிக்கும் போது நிச்சயம் பேசுவேன் என்றார். இதையடுத்து சரத்குமார் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.


Click it and Unblock the Notifications











