Actor Arjun: இந்தியர்களின் பெருமைமிகு தருணம்.. பிரதமருக்கு நன்றி சொன்ன அர்ஜூன்!
சென்னை: அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழா சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். இந்திய அளவில் திரைத்துறை மற்றும் விளையாட்டு வீரர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்கும்வகையில் நடிகர் ரஜினிகாந்தும் இன்றைய தினம் விமானம் மூலம் அயோத்தி புறப்பட்டு சென்றார். இந்த பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னுடைய பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இது என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். நாளைய தினம் 12.20 மணியளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து இந்திய அளவில் ஏராளமான பிரபலங்கள் தங்களது மகிழ்ச்சியை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியர்களின் பெருமைமிகு தருணம் இது என்று நடிகர் அர்ஜூன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும் இதையொட்டி பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் இந்திய அளவில் திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் என 11,000 விவிஐபிக்கள் பங்கேற்கவுள்ளனர். இதையொட்டி அயோத்தியில் மட்டுமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அதில் பங்கேற்க ஏராளமான பக்தர்களும் அயோத்திக்கு படையெடுத்து வருகின்றனர்.
குவிந்த பக்தர்கள்: அயோத்தி முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் குவிந்துள்ள பக்தர்கள் ராமர் பாடல்களை பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பாபிஷேகத்தை தூர்தர்ஷனில் நேரலையில் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில திரையரங்குகளிலும் இந்த நிகழ்ச்சி நேரலையில் திரையிடப்பட உள்ளது. நாடு முழுவதும் 160க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், பக்தர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து கும்பாபிஷேகத்தை நேரில் பார்க்கும் பரவசத்தை பெறலாம். இதற்கான கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் பங்கேற்பு: இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தென்னிந்திய அளவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்தியர்கள் அனைவரும் பெருமைபடக்கூடிய தருணம் இது என்று நடிகர் அர்ஜூன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்தியர்களின் 500 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளதாகவும் அதற்கு காரணமான பிரதமர் மோடி மற்றும் அவரது குழுவினருக்கும் அர்ஜூன் நன்றி தெரிவித்துள்ளார். ராமர் கோயிலுக்காக கடந்த ஆண்டுகளில் பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டு அர்ஜூன் நெகிழ்சசி தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் பாராட்டு: தீவிர ஹனுமான் பக்தரான அர்ஜூன், சென்னையில் ஹனுமானுக்காக பிரம்மாண்டமான கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அயோத்தியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் அர்ஜூன் பங்கேற்பாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அயோத்தியில் ராமர் கோயில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டதாக இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











