4 பாகங்களாக உருவாகும் டிமான்டி காலனி.. ஆகஸ்டில் சூட்டிங் -அப்டேட் சொன்ன அருள்நிதி!
சென்னை : நடிகர் அருள்நிதி சிறப்பான கதைக்களங்கில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்களில் நடித்தாலும் ஆண்டுக்கு ஒருமுறைதான் இவரது படங்கள் வெளியாகி வருகின்றன.
இவர் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக காணப்படுகிறது.

நடிகர் அருள்நிதி
நடிகர் அருள்நிதி சிறப்பான மற்றும் மிரட்டலான கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அனைவரும் பயப்படும் வகையில் இருந்த பேய் ட்ரெண்டிங்கை காமெடி போய்களாக மாற்றி படங்கள் வந்துக் கொண்டிருந்த நிலையில், இவரது டிமான்டி காலனி அதை மீண்டும் ஹாரர் ஜானருக்கு மாற்றியது.

மிரட்டலான கான்செப்ட்
இந்தப் படத்தில் காமெடியும் சிறப்பான வகையில் சேர்க்கப்பட்டிருந்தது. ஜோதிடராக வரும் எம்எஸ் பாஸ்கர், ஜில் கதாபாத்திரம் உள்ளிட்டவை படத்திற்கு காமெடியில் வலு சேர்த்தது. ஆனாலும் படம் இடைவேளையை நெருங்கும் நேரத்திலிருந்து மிரட்டலாக அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தப் படத்தை இப்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக வைத்துள்ளது.

அஜய் ஞானமுத்துவின் படம்
படம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ல் வெளியானது. இந்தப் படத்தின் மிரட்டலான திரைக்கதை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்திருந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட்டில் சூட்டிங்
இதனிடையே தற்போது அருள்நிதி அளித்துள்ள பேட்டியில் படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்டில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தில் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் முதல் பாகத்தை போலவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளராகும் அஜய் ஞானமுத்து
ஆனால் அஜய் ஞானமுத்துவிற்கு பதிலாக அவரது இணை இயக்குநர் வெங்கி வேணுகோபால் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். அஜய் ஞானமுத்து டிமான்டி காலனியின் இந்த இரண்டாவது பாகத்தை தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின்மூலம் அவர் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். இந்தப் படம் அடுத்தடுத்து 4 பாகங்களாக வெளியாக உள்ளதாகவும் அதற்கான கதைகள் தயாராக உள்ளதாகவும் அருள்நிதி தற்போது குறிப்பிட்டுள்ளார்.

அஜய் ஞானமுத்து மகிழ்ச்சி
இந்நிலையில் தன்னை சிறப்பான இயக்குநராக நிலைநிறுத்த உதவிய அருள்நிதி, தன்னை தயாரிப்பாளராகவும் ஆக்க உறுதுணையாக இருப்பது குறித்து அஜய் ஞானமுத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் டிமான்டி காலனியை தொடர்ந்து நயன்தாராவின் இமைக்கா நொடிகள் மற்றும் தற்போது வெளியாகவுள்ள கோப்ரா படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டி பிளாக் படம்
இதனிடையே அருள்நிதியின் டி பிளாக் படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. இந்தப் படமும் ஹாரர் த்ரில்லராகத்தான் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக அருள்நிதி நடித்துள்ளார்.

8 கிலோ வெயிட் குறைத்த அருள்நிதி
கடந்த 2011ல் வெளியான ஞானகுரு படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்த அருள்நிதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இதற்காக அவர் தற்போது 8 கிலோ வரை எடையை குறைத்து கல்லூரி மாணவர் லுக்கிற்கு தன்னை மாற்றிக் கொண்டதாக சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அடுத்தடுத்த படங்கள்
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் அருள்நிதியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்காக மொத்தமாக காத்திருக்கின்றன. தற்போது டி பிளாக் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக தேஜாவு, டைரி போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும் பெயரிடப்படாத ஒரு படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications











